முள்ளும் மலரும்(சிறுகதை)

 



- நட்சத்திரன் செவ்விந்தியன்
“துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று”
- குறள் 586(ஒற்றாடல்)

1. ஒற்றன் பிரிகேடியர் கரும்புலி மொஹமட்

ஒரு 19 வயதுக் கரும்புலி ஒற்றன் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களில் பொட்டம்மானின் தொடர்பறுபட்டுக் கொழும்பில் மாட்டிக்கொண்டான். கொழும்பின் மிகச்செல்வந்தக் குறிச்சியான கறுவாக்காட்டில் அவன் மொஹமட் என்ற மாலைதீவு முஸ்லீமின் பெயரோடு, மாலைதீவு  கள்ளப்பாஸ்போட்டில் ஒரு சர்வதேச மாணவனாகக் கொழும்புப் பல்கலைக்கழகத்தில்  படித்துக்கொண்டிருந்தான். அம்மானும் தலைவரும் செத்ததையோ யுத்தம் முடிந்ததையோ அவன் நம்பவேயில்லை. பொட்டம்மான் அவனிடம் 2008இல் கொடுத்தனுப்பிய ஐந்து  லட்சம் அமெரிக்க டொலர்களில் அவனது செலவுக்குப் போனதைவிட மிகுதியைக் காசாகவே தனது கறுவாக்காட்டு அறையில் ஒழித்துவைத்திருந்தான். 

பொட்டம்மான்  உருவாக்கிய மிகச்சிறந்த ஒற்றன்/கரும்புலி மொஹமட்தான். மொஹமட்(இயக்கப்பெயர்) 1990 மே 19 அதிகாலை 3.19இல் இரண்டு புலிப் பெற்றோருக்குப் பிறந்தவன். போராளிகளான இருவரும் காதலித்துத் திருமணம் செய்தவர்கள். இருவரும் கிளிநொச்சி மலையக வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.  இருவரும் இந்தியப்படைக் காலத்தில் தலைவர் மணல்காட்டுக் காடுகளிலிருந்தபோது அவரின் உள்ளக  மெய்ப்பாதுகாவலர்  அணியிலிருந்தவர்கள். தலைவரே இருவரும் காதலாகி இருப்பதை அவதானித்திருக்கிறார். 1989 ஜூலை மாதக்கடைசியில் பிரபாகரன் பிரேமதாச தேனிலவுக்காலத்தில் இந்தியப்படைகள் இலங்கையை விட்டு வெளியேறுவது உறுதியானது.  மணலாறு முற்றுகையை விட்டு  இந்தியப் படைகள் வெளியேறின. காட்டில் ஒரு முன்னிலவு நேரம், மொஹமட்டின் தகப்பன் பிரபாகரனோடு தேநீர் அருந்தும்போது அவளின் பெயரை அதிகமாக உபயோகித்துவிட்டான் . பின்னிலவில் மெய்பாதுகாவலர் மாறி தாய் வந்தபின் தலைவர், 

“அவனை நீ காதலிக்கிறாயா”  என்று கேட்டார். 

அவள் பேசவில்லை. “அண்ணை” என்ற சிணுங்கல்  மட்டும் கொடுத்தாள்.  தலைவர் கதையை மாற்றினார்.

 “இனி பிரச்சனை குறைந்திடும். பிரேமதாச நாங்கள் கேட்பதைக் கொடுக்கோணும். கொடுப்பார்.”

” . . . .”

“அடுத்த மாசம் என்ர மனுசியும் மோனும் மோளும் சுவிசில இருந்து வந்துடுவினம். பிரேமதாச கொழும்பிலயிருந்து அவயளை ஹெலியில  கொணந்து காட்டில இறக்கிவிடுவன் எண்டிருக்கிறார். ரண்டு வரியமாச்சு அவயளைப் பிரிஞ்சு…

அது சரி.  நீ முள்ளும் மலரும் படம் பாத்தனியோ?” 

“ஓமண்ணை. எனக்கு புடிச்சபடம்” 

“சரி. முதல் கேள்விக்கு இப்ப விடை சொல்லு” 

உடனேயே வெடித்து விழுந்தாள்.

“அண்ணை பொட்டம்மானைக் கேட்டுப்பாருங்க. அவருக்கு எங்களைத் தெரியும். ஆறாம் வகுப்பிலிருந்து அவனை நான் காதலிக்கிறன். அவன் இயக்கத்துக்கு வந்ததாலைதான் நானும் அவனைக் காண இயக்கத்துக்கு வந்தன். எனக்கு என்ன தண்டனையும் தாங்கண்ணன். நான் பாவி” 

மூன்றாம் நாள் முழுநிலவில் தலைவர் தாலி எடுத்துக்கொடுத்து காட்டில் நடந்தது திருமணம். 

1990 ஜூன் மாதம் மொகமட்டின் 31ஆம் சடங்கு நடந்த அடுத்தநாள் 2ஆம் ஈழப்போர் தொடங்கிவிட்டதால் தந்தை மகனையும் மனைவியையும் விட்டுப் போருக்குப் போகவேண்டியிருந்தது.  தீவுப் பகுதியில் நடந்த சமரொன்றில் தந்தை காணாமல்போனார். அவர் உயிரோடு இருக்கிறாரா என்பதே தெரியவில்லை. தாய்க்கு இதனைத் தாங்கமுடியாமல் இருந்தது. மூன்றாம் நாள் மொஹமட்டைப் பாட்டியிடம் கொடுத்துவிட்டு நஞ்சுமாலை அணிந்து சீருடை தரித்துத் தீவுப்பகுதிக்கே போரிடப்போனாள்.  கடல் வற்றும் பொழுதொன்றில் ஏதோ ஒரு மணல்திட்டில் தன் காதலனை மீளப்பெறுவேன் என்று குருட்டுச் சாத்திரம் பார்த்தாள். அவனுடைய சீருடையைக்கூட அவளால் கண்டு பிடிக்கமுடியவில்லை. மூன்று மாதம்  பிறகு அவளது அணி யாழ்கோட்டை முற்றுகையின் இறுதிப்போரில் ஈடுபட்டது. தனது காதலன் உயிரோடு கோட்டையில் இருப்பான் என்று உக்கிரமாகப் போரிட்டாள். ஆயுதத்தோடு கோட்டை மதிலைக்கடந்த முதல் புலி அவள். கன்னத்தில் வெடிபட்டு கோட்டை அகழியுள்  சடலமாக விழுந்தாள். 

அடுத்த ஆண்டு மொகமட்டின் முதல் பிறந்தநாளுக்கு முதலிரவில் மொகமட்டை நெஞ்சில் வைத்தபடி தூங்கிய பாட்டி எழுந்திருக்கவே,இல்லை. நித்திரையில் மாரடைப்பு.

2.

மொகமட்டுக்குத் தன் தாய் தந்தையர் யாரென்று தெரியாது. புலிகளின் அனாதை இல்லமான செஞ்சோலையில் வளந்தவன். அறிவு வந்த நாளிலிருந்து மாதத்திற்கு ஒரு தடவை வரும் தலைவரையும் அவர் அவனைத் தன் இடுப்பில் தூக்கிவைத்துத் தன் கையாலேயே ஊட்டிவிடும்  ’கண்டோசும்’ பேரீச்சம்பழங்களும் பருவகாலப் பாலைப்பழங்களும் அவனது முதல் நினைவுகள். அவனை யாரும் இயக்கமாகும்படி நிர்ப்பந்திக்கவில்லை.  2003 தைப்பொங்கல் அன்று சமாதானக் காலத்தில் 12 வயதில் அவனாகவே சேர்ந்தான். 3 மாதகாலப் பயிற்சியின் முடிவில் சிறப்பான போர்த்திறமைகளைக் காட்டும் பயிற்சியாளர்கள் இனங்காணப்பட்டுக் குறித்த துறைத்தலைவருக்குச் சிபாரிசு செய்யப்படுவது இயக்கத்தின் நடைமுறை. மொஹமட் ஒரு புத்தகப்பூச்சி. பயிற்சிக்காலத்தில் இரவில் விளக்கணைத்துத் தூங்க வேண்டும். இவன் இரவில் அடிக்கடி கக்கூசுக்குப் போய்வந்தான். பயிற்சி மாஸ்டர் ஒருநாள் இவனைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டார். கக்கூசில் 40 நிமிடம் இருந்துவிட்டுக் குப்பி விளக்கோடும் வாளியோடும் ஒரு புத்தகத்தோடும் வெளிவந்தான். மாஸ்டர் அவனுக்குத் தண்டனை கொடுத்து விசாரித்தார். அப்போதுதான் அவனின் அசாத்திய ஞாபக சக்தியை அவர் கண்டறிந்தார். இதுவரை இறந்த அத்தனை மாவீரர்களின் பிறந்த, இறந்த திகதிகள், ஊர், சொந்த, இயக்கப் பெயர்கள், இறந்த சமர், இயக்கம் கொடுத்த பட்டம் என்பவற்றை அச்சொட்டாக ஒப்புவித்தான். தற்செயலாக மாஸ்டர் இந்த விபரத்தை பொட்டமானிடம் போட்டுக் கொடுத்துவிட்டார். தன்னைவிட ஒரு விபரமானவன் இயக்கத்திலிருக்கிறானா? அதுவும் 13 வயதில் என்று அதிசயித்த பொட்டம்மான் தன் டயரியில் மொஹமட்டின் அணியின் பட்டமளிப்பு விழாவில் தானே பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளதாகக் குறித்தார்.  அத்தினத்தில்  பொட்டம்மானே பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பயிற்சி முடித்த போராளிகளின் இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பிறகு அவர்   மொகமட்டின் அணியில் அத்தனை போராளிகளுக்கும் சயனைட் மாலை அணிவித்தார். மொகமட்டின் முறை வந்ததும் தன்னுடைய சொண்டைக் கடித்தபடி, 

“நீதானா மொஹமட்? 1983 ஆம் ஆண்டு  இயக்கத்தின் திருநெல்வேலித் தாக்குதல் பற்றி உனக்குத் தெரிந்தது என்ன” என்று கேட்டார். தேதி, நேரம், இடம், பங்குபற்றிய  போராளிகள், இறந்த போராளி, இறந்த ராணுவத்தினர் எண்ணிக்கை எல்லாம் சொல்லி அடுத்தநாள் அவ்விடத்தில் ராணுவத்தினர் கொன்ற மக்களின் எண்ணிக்கையை மொஹமட் சொல்லத் தொடங்கியபோது பொட்டம்மான் அவனை ஆரத்தழுவி இரகசியமாகச் சொன்னார்:  

“விழா முடிய என்னை வந்து சந்தி.” 

அந்தச் சந்திப்பில் அசந்த பொட்டம்மான் அவன் படித்த புத்தகங்களைப் பார்க்க அவனது கூடாரத்துக்குப் போனார். மொஹமட்டின் சுருட்டிவைத்த பாய்க்கருகில் ஒரு காட்போட் பெட்டியிலிருந்தது புத்தகங்களும் பத்திரிகைகளும் ஒரு குறிப்புப் புத்தகமும்  மொஹமட்டின் கையெழுத்திலிருந்தது. அதையெடுத்துப் படித்த பொட்டம்மான்:

“இது  மார்க்சிம் கார்க்கியின் தாய் நாவல் அல்லவா? இதை நீ ஏன் பார்த்து எழுதுகிறாய்?” 

“அண்ணன் நான் பார்த்து எழுதல்ல. என்ர ஞாபக சக்தியை சோதிக்க ஒரு பக்கத்தைப் படிச்சிட்டுப் பார்க்காமல்  அப்படியே எழுதுவன்.” 

அக்கணங்களில் பொட்டம்மானே எமோஷனல் ஆகிவிட்டார். பஷீர் காக்காவின் சிபாரிசில் ’கேணல்’ கிட்டு பொட்டம்மானை இயக்கத்துக்குச் சேர்த்தார். பொட்டுக்குக் கிட்டு யாழ்ப்பாணத்தில் பயிற்சியாளராக இருந்தபோது தாய் நாவலைப் படிக்கக் கொடுத்திருந்தார். படித்தானா என அறிய நாவல் பாத்திரங்களைப்  பற்றிக் கேள்விகள் கேட்டிருந்தார்.  இதைவிட மொஹமட் தலைவரைவிடக் கட்டையான கிட்டுவின் உயரமளவே இருந்தான். 

இப்ப மொஹமட் வேற லெவல். பொட்டு இறுதிப் பக்கங்களிலொன்றை கொடுத்து இதைப் படித்து எழுது என்று கொடுக்க அவன்  உடனேயே எழுதிக்கொடுத்தான். 

பொட்டுவின் வாக்கிரோக்கி அப்போது அலறியது, தலைவரின் ரேடியோப் பிரிவிலிருந்துதான்.

“நீ எனக்கு வேலை செய்கிறாய்” என்றவாறு பொட்டு மெய்ப்பாதுகாவலர் சகிதம் உடன்   வெளியேறினார்.

3.

அன்றிலிருந்து மொஹமட் கிழமையில்  5 நாட்கள்  18 மணித்தியாலங்கள் வேலை செய்தான்.  காலை 7 மணிக்கு அவன் பொட்டம்மானின் அலுவலக பங்கரில் விழித்தெழுவான். காலைக்கடன்கள், காலைச்சாப்பாடு முடிய 8 மணிக்கு அவன் சிங்களம் படிக்கப் போவான்.  முதல் மூன்று மணித்தியாலம் சிங்களப் பாடம். 11இல் இருந்து 1மணி வரை அவன் சிங்களப் பாட வீட்டு வேலை செய்து பின் அன்றைய தினசரிகள், புத்தகங்களை ஒரு மிதிவெடி றோல்ஸ், தேநீர், ஏதோ ஒரு முக்கனியோடு படிப்பான். 

மதியம் ஒரு மணிக்கு பொட்டம்மானோடு ஆகாரம். பொட்டு தலைவரின் நேர சூசிகைக்கேற்ப காலை 6 இலிருந்து மதியம் 12 வரை தூங்குபவர். மொஹமட்டுக்குச் சோறும் கறியும், பொட்டுவுக்குப் புட்டு, தோசை, இட்லி முதலிய காலை உணவும் பரிமாறப்படும். இந்நேரத்தில்தான் அன்றைய பத்திரிகைச் செய்திகளை மொஹமட் பொட்டம்மானுக்குச் சொல்வான். முக்கியமான செய்திகளை அச்சு எடுத்துக் கோப்பில் போட்டுக்கொடுப்பான்.   மேலதிகமாகத்  தேவைப்படும்  செய்திளை ஆராய்ந்து அறிந்து சமர்ப்பிக்க பொட்டு அப்போது உத்தரவிடுவார். 

2 மணியிலிருந்து 5 மணிவரை  மொஹமட்டின் ஆங்கிலப் பாடம். அது முடிய ஒரு மணிநேரம் மொஹமட் ஆங்கில வீட்டுப்பாடத்தில் செலவிடுவான். 6 மணியிலிருந்து  ஏழரை மணிவரை அம்மானினதும் மொஹமட்டினதும் உடற்பயிற்சி நேரம். 3 நாட்கள் அம்மான் Gym இலும் 2 நாட்கள் காட்டில் நடப்பதிலும் செலவழிப்பார். மொஹமட் கூடவே போவான். உடற்பயிற்சிகளிலும் பொட்டுவும் மொகமட்டும் பேசியபடியே இருப்பார்கள். இதைவிட பொட்டம்மானின்  50 மெய்ப்பாதுகாவலர்கள் கூடவே போவார்கள்.

இரவு எட்டு மணிக்கு பொட்டம்மான் மதிய உணவு  சாப்பிடுவார். அதற்கிடையில் மொஹமட் இரண்டாவது அவரசக் குளிப்பு முடித்து வந்துவிடுவான். பொட்டம்மானின் முதற் குளிப்பும் இப்போதுதான். மொஹமட்டின்  இனிய தருணங்கள் இவை. பொட்டம்மான் பகலைவிட இரவை நேசித்தவர். இரவில்தான் தலைவர் பொட்டம்மானுக்குத் தரிசனம் கொடுத்தார்.  பொட்டம்மான் ஒரு தகப்பனைப்போல மொஹமட்டோடு செல்லம் பொழியும் தருணங்கள் அவை. பொட்டுவுக்குச் சோறும் கறியும்; மொஹமட்டுக்கு இரவுப்பலகாரங்கள் ஏதும் இருக்கும்.

இரவு 9 பணியிலிருந்து 11 மணிவரை மொஹமட்டின் Apprentice Hours. பொட்டம்மானின் மெய்ப்பாதுகாவலர்கள் வெளியிலிருக்க அவன் மட்டுமே பொட்டம்மானோடு அந்தப் பதுங்குகுழி அறையிலிருந்தான். சிங்கள நாட்டிலிருந்த அத்தனை ஒற்றர்களோடும் பொட்டம்மான் மிக வலுவான இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாகத்  தொடர்பாடல் செய்வதை அவன் அவதானித்தான். பாடங்கள் படித்தான்.

மொஹமட்டின் முக்கியத்துவம் கருதி பொட்டு அவனுக்கு ஒரு மெய்ப்பாதுகாவலனையும் கொடுத்திருந்தார். மொஹமட் பொட்டோடு இருக்கும் தருணங்களில் மெய்ப்பாதுகாவலன் வெளியிலிருப்பான்.

பொட்டம்மானின் மெய்ப்பாதுகாவலர்கள் பொட்டம்மானைவிட மொஹமட்டைக் கண்டு பயந்தார்கள். ஒரு குரங்கைப்போல தாவி வந்து அம்மானின் ஆறறிவில்லாத செல்லப் பிராணிபோல ஒசைப்படாமல் இரவு 11 மணிக்கு மறைந்துபோகும் குரங்கு.

11 மணிக்கு மொஹமட் தன் நிலவறைக்கு ஏகுவான். மெய்பாதுகாவலன் வெளியிலிருப்பான்

அனாதைகள்  தனித்துச் சாப்பிடும் இரவுகள் கொடியவை. “ஆனால் பொட்டம்மான் தன் குடும்பத்தோடு இரவுச்சாப்பாடு மட்டுமே சாப்பிடுகிறார். தன்னோடு காலையும் மதியமும் சாப்பிடுகிறார்” என்ற யதார்த்தம் அவனுக்கு மிகப்பெரிய கௌரவம். 

சனி, ஞாயிறு அவனுக்கு விடுமுறை. காலையில் அவன் பத்திரிகைகள், புத்தகங்கள் படிப்பான். ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வாசிப்புப் பயிற்சி செய்வான். ஆங்கில, சிங்கள வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் பார்ப்பான், கேட்பான். மதியம் ஒரு மணிக்கு பொட்டம்மானோடு உணவும் பத்திரிகை அறிக்கை வழங்குதலும். பின்னர் அவன் தன் பழைய செஞ்சோலைக்குத் தன் மெய்ப்பாதுகாவலனோடு  போய்த் தன்னோடு அனாதைகளாக வளர்ந்தவர்களோடு  உரையாடி அங்கு பின்னேரம் கால்ப்பந்து விளையாடி இரவுச்சாப்பாடும் அங்கு முடித்து 9  மணிக்குத் தன் நிலவறைக்குப் போவான். தன்னுடைய மடிக்கணனியில் இரவு ஒரு மணிவரை புலனாய்வு சம்பந்தமான விபரணப்படங்கள் பார்த்துப் பின் தூங்குவான். 

 2004 நத்தாருக்கு முதல்நாள் மொஹமட்டின் ஆங்கில, சிங்கள வகுப்புக்கள் முடிந்தன. அப்போது அவன் ஆங்கிலத்திலிருந்தும் சிங்களத்திலிருந்தும் எந்தப் பிரதியையும் தமிழில் மொழிபெயர்க்குமளவுக்குத் தேறியிருந்தான். அடுத்த 6  மாதங்கள் மொஹமட்டுக்குத் தகவல் தொழில்நுட்பத்தில் கடுமையான பயிற்சி வழங்கப்பட்டது. இணையத்தில் புகுந்து மாற்றானின் தரவுகளைத் திருடும் கலை உட்பட.

இதற்குப்பின் அவன் வேலைப்பழு அதிகரித்தது. பொட்டம்மான் கொடுக்கின்ற ஆங்கிலப்  புலனாய்வுப் புத்தகங்களின் அத்தியாயங்கள், பக்கங்களையும் அவனே மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. இதற்கு முதல் பொட்டம்மானுக்கு அவ்வேலையைச் செய்து கொடுத்துக்கொண்டிருந்தது பேராதனைப் பல்கலைக்கழகத்தில்  பொறியியல் படிப்பைப் பாதியில் விட்டு இயக்கத்தில் சேர்ந்த பொட்டம்மானின்  வயதொத்த மாதவன் மாஸ்டர்தான். பொட்டம்மானுக்கும் சிறிது ஆங்கிலம் தெரியும். மாதவன் மாஸ்டரின் ஆங்கில மொழிபெயர்ப்பைவிட மொஹமட்டின்  மொழிபெயர்ப்பு துல்லியமாக இருந்ததை பொட்டு உடனேயே கண்டுகொண்டார். 

2005 நடுப்பகுதியில் பொட்டம்மான் மொஹமட்டைப் புலனாய்வுக் களப்பயிற்சி பெறுவதற்காகக் கிழக்கு மாகாணத்துக்கு அனுப்பினார். கேணல் கருணாவின் படைகள் இயக்கத்தை விட்டுப் பிரிந்து இலங்கைப் படைகளோடு இயங்கிக்கொண்டிருந்த காலம்.  மொஹமட் ஒரு புலனாய்வுப் பயிலுநராக அங்கு இயங்கினாலும் அவன் பொட்டம்மானுக்குச் சுயாதீனமாக அனுப்பிய துல்லியமான புலனாய்வு அறிக்கைகளையே பொட்டம்மானின் உள்ளுணர்வு நம்பியது.

“அண்ணன் இயக்கத்தின் வளங்கள் அரிதாகிற இக்காலத்தில் இரு போர்முனைகள் எங்களுக்குத் தேவையா என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. அண்ணை சத்தியமாகச் சொல்கிறேன். என்னுடைய பயம் தலைவர் அடிக்கடி சொல்கிற “எந்தப் பலமான எதிரிக்கும் ஒரு பலவீனம் இருக்கும்” என்ற தத்துவத்திலிருந்து வந்தது. புலிகளின் இப்போதைய பலவீனம் கிழக்குப் போர்முனைதான் என்பது பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாயவுக்கு நன்கு தெரிந்திருக்கிறது.  பெயரளவில் நோர்வே சமாதானத் திட்டத்தை இப்போதும் பின்பற்றுவதாக உலகுக்குப் பூச்சாண்டி காட்டுகிற மகிந்த அரசு கிழக்கைப் பிரித்து மேயுமளவுக்குத் தன் முழு இராணுவ வளங்களையும் கிழக்கில் பிரயோகிக்கிறது. இந்தப் பொறிக்குள் புலிகள் விழக்கூடாது.”

இதைப் படித்தபின் பொட்டம்மான் முதலில் செய்த காரியம் மொஹமட்டை உடனடியாகப் பாதுகாப்புடன் வன்னிக்குத் திரும்பக் கூட்டிவர ஒரு அணியை ஏற்பாடு செய்தமைதான். பிறகு பிரபாகரனுக்குக் கிழக்கிலிருந்து புலிகள் பின்வாங்க வேண்டும் என்று அறிக்கை சமர்ப்பித்தார். பிரபாகரன் மிகக் குழம்பியிருந்த காலங்கள் அவை. அவருக்கு பொட்டுவின் இவ்வறிக்கையின் உண்மைத்தன்மையை அறிந்து சுதாரித்து இயங்க  மேலும் 4 மாதங்கள் தேவைப்பட்டது. 

பொட்டம்மானின் வன்னி அலுவலக  நிலவறைக்குத் திரும்பிய மொஹமட் இன்னும் மிக நெருக்கமானான் பொட்டம்மானுக்கு. மாதவன் மாஸ்டரே மொஹமட்டில் பொறாமைப் படுமளவுக்கு நிலமை எகிறியது. இப்போது மொஹமட் பொட்டம்மானின் புலனாய்வு விபரக்காரன்  மட்டுமல்லன். பொட்டம்மானின் அரசியல் ஆலோசகராகவும் அவன் மாறியிருந்தான். 

தலைவரையும் பொட்டம்மானையும்போல மொஹமட்டும் பகலில் தூங்கி இரவில் விழித்திருக்கும் நிலமைக்கு வந்திருந்தான். 

பல தடவைகள் போர் நிலமைகளின் உக்கிரத்தைத் தலைவருக்கு விளக்க பொட்டம்மான் தலைவரைச் சந்திக்கச் சென்ற பின்னிரவுகளில் மொஹமட்டையும்  கூட்டிச்சென்றார். மொஹமட் அவ்வாரத் தென்னிலங்கைச் சிங்கள, ஆங்கில பத்திரிகைச் செய்திகளின் சாரத்தை ரத்னச்சுருக்கமாக ஒப்புவித்தான். இதைவிட சர்வதேச பத்திரிகைகளான The Economist, The Guardian , New York Times, Washington Post, சென்னை Frontline முதலியவற்றில் வரும் ஈழ அரசியல் ஆய்வுக் கட்டுரைகளினினதும் அமெரிக்க இரட்டைக்கோபுரத் தாக்குதலின் விளைவான சர்வதேச அரசியலின் தாக்கம் பற்றிய கட்டுரைகளினதும் தமிழ் மொழிபெயர்ப்புகளில் தலைவர் அதிக ஈடுபாடு காட்டினார். மொஹமட்டின் குறித்த தமிழ் மொழிபெயர்ப்புப் பிரதிகளை தலைவர் அப்போதே தன்னை மறந்து படிக்க ஆரம்பித்துவிடுவார். அக்கணங்களில் பொட்டுவும் மொஹமட்டும் மௌனமாக இருப்பார்கள்.  முதல் இரவில் இது நடந்தபோது மொஹமட் குழம்பிவிட்டான்.  அவ்விரவு சந்திப்பு முடிந்து பொட்டுவும் மொஹமட்டும் பங்கர் இறங்கும் போதுதான் மொஹமட்டுக்கு விடை கிடைத்தது.

“பாலா அண்ணை இருக்கும்வரை தலைவருக்குச் சர்வதேச அரசியலை அச்சொட்டாக  ஒப்புவித்தார். ஒசாமாவின்  நியூ யோர்க் ரட்டைக் கோபுரத் தாக்குதல் பாலா அண்ணை லண்டனில. ஆனா ஒரு வாரத்திலேயே தலைவருக்கு பாலா அண்ணையிடமிருந்து இதன் விளைவுகளின் தாக்கம் வந்துட்டு. பாலா அண்ணையை அமெரிக்க, பிரித்தானிய உளவு நிறுவனங்கள் எச்சரித்தன. சர்வதேச ஆயுதச்சந்தையில் உங்களால் ஒரு ஆயுதமும் இனி வாங்கமுடியாது. வாங்கினாலும் ஊருக்குக் கொண்டுபோக முடியாது என்று. உண்மை தான்ரா. 2003 க்குப்பிறகு ஒரு ஆயுதக்கப்பலையும் எங்களாலை ஊருக்குக் கொண்டுவர முடியேல்லையே. இப்ப பாலா அண்ணை இல்லாததால் தலைவருக்கு எல்லாம்  நீதான்.”

2007 பிற்பகுதியில் மேலும் புலனாய்வுக் களப்பயிற்சி பெற மொஹமட்டைத்  தன்னுடைய கேணல் சாள்ஸ் புலனாய்வு  அணியில் போட்டு மன்னார் களமுனைக்கு அனுப்பினார். ஒரு மாதத்தில் திருப்ப அழைத்துக்கொண்டார். பொட்டு பயந்தபடியே கேணல் சாள்ஸை அடுத்த மாதமே  ஸ்ரீலங்காவின் ஆழ ஊடுருவும் படைகள் கொன்றுவிட்டன.

தான் உருவாக்கிய மொஹமட் என்கிற பெரும் ஒற்றன்/ கரும்புலி மொஹமட் பற்றி பொட்டம்மானுக்குப் பெருங்கனவுகள் இருந்தன. 2007இல்  மாவீரர் தின தலைவரின் உரையை வழங்குவதற்கு முதல் நாள் பொட்டம்மான் மொஹமட்டோடு மந்திராலோனையில் ஈடுபட்டார்.

 நவம்பர் 26, 2007ஆம் ஆண்டில் தலைவரின் பிறந்தநாளில் அதிகாலை 4 மணிக்கு நிலவறையில்   தலைவரும் பொட்டம்மானும் மொஹமட்டும் ஒன்றாக இரவுணவு  சாப்பிட்டார்கள். தலைவரும் பொட்டம்மானுமே அந்த இரவில் பறைந்தார்கள். மொஹமட் மௌனமாகவேயிருந்தான். 

“அண்ணை கிழக்கை நாங்கள் இழந்திட்டம்.  எங்களுக்கு வந்துகொண்டிருந்த ஆயுத சப்ளைகளையும் இழந்திட்டம். இது கோட்டாவுக்கு வடிவாத் தெரியும். நிலமை இறுக முதல் ஒசாமா ஆப்கானில்தானிலிருந்து காத்தோடு காத்தாக மறைஞ்சமாதிரி மறையுங்கோ. காட்டால சிங்கள நாட்டுக்கு தப்பியோடுங்கோ. அங்கிருந்து எங்கும் தப்பியிடலாம் நீங்கள். போராட்டம் தொடரவேண்டுமெண்டால் நீங்கள் உயிரோடை இருக்கோணும் அண்ணை.” 

என்று பொட்டம்மான் சொன்னதை பிரபாகரன் கேட்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை. 

“இது நான் சமைச்ச கோழிக்கறி, மொஹமட். எப்படியிருக்கடா?” என்றார். 

மொஹமட் மிகச் சிரமப்பட்டு நசிந்து வழிந்தான்.

அன்றிரவே பொட்டு,  மொஹமட் தலமையில் ஒரு சுயாதீன இரகசிய கரும்புலி / ஒற்றர் கட்டளைத் தலமையகத்தைத் தென்னிலங்கையில் உருவாக்கும் ஒரு திட்டத்தை வரைந்தார்.  பெப்ரவரி  முதல்வாரத்தில் மொஹமட் கொழும்பு சென்று ஒரு பாதுகாப்பு வீடு உருவாக்கி பொட்டம்மானின் செய்திக்காகக் காத்திருக்க வேண்டும். அடுத்த இரு மாதங்களுக்குள் மொஹமட்டுக்கான வளங்களும் ஆளணிகளும் திட்டங்களும்  வழங்கப்படும். இடைக்காலத்தில் மொஹமட் நீர்கொழும்புப்  பகுதியில் சில மீனவக் கடத்தல்கார மாபியா அமைப்புக்களுடன் நட்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பிரபாகரன், பொட்டு முதலிய முக்கியத் தலைவர்கள் தென்னிலங்கைக்குத் தப்பிவந்தால் அவர்களது பாதுகாப்புக்கும் ஈழத்தை விட்டுக் கடல்வழியாகத் தப்பிச்செல்வதற்கான ஆயத்தங்களைச் செய்துவைக்கவேண்டும். தவிர்க்க இயலாத கட்டங்களில் மட்டும் மொஹமட் ஒரு கரும்புலியாகச் சாகவேண்டிவரும்.

அடுத்த ஒருமாதம் மொஹமட்டுக்கு அசல் முஸ்லீமாகும் பயிற்சிகளும் கரும்புலியாகும் பயிற்சிகளும்  வழங்கப்படடன. அவனுக்குக் கிளிநொச்சி புலிகள் வைத்தியசாலையில் சுன்னத் செய்யப்பட்டது.  புலிகளுக்காகத் தமிழகத்தில் வேலைசெய்து வன்னிக்குத் தப்பியோடிவந்த ஒரு தமிழ்நாட்டு முஸ்லீம் ஒருவர் அவனுக்குப் புனித குரானும் அடிப்படை அறபி ஓதல்களும் கற்றுக்கொடுத்தார்.  ஐந்து வேளை தொழக் கற்றுக்கொடுத்தார்.  ஒரு ஆங்கில புனித குரான் புத்தகத்தை பொட்டம்மான் மொஹமட்டுக்குப் படிக்க கொடுத்தார். அந்த ஒரு மாதத்தில் மொஹமட் குரானைக் கரைத்துக் குடித்துவிட்டான்.

2008 சனவரி முதல் நாள் சனாதிபதி மகிந்த ராஜபக்சே நோர்வே மத்தியஸ்தம் வகித்த போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்த செய்தி பொட்டம்மானின் பங்கரை வந்தடைந்தபோது மொஹமட் கூடவே இருந்தான். பெப்ரவரி 2ஆம் தேதி, பின் சாமம்,  முல்லைத்தீவுக் கடலில் பொட்டு மொஹமட்டுக்கு விடைகொடுத்தார். பொட்டம்மானின் கண்களில் முதலும் கடைசியுமாகக் கண்ணீர் உதிர்ந்த இரவு அது.  தன் கண்ணீரை மறைக்க அந்தத் தேய்பிறைக்கால இரவிலும் தன்னுடைய மெய்ப்பாதுகாவலன் ஒருவனின் Sun Glass ஐப் பறித்து  வேடிக்கை நாடகம்போல அணிந்திருந்தார்.

அந்த ஆங்கில குரானை கையில் வைத்துக்கொண்டு மொஹமட் உதிர்த்த கடைசி வார்த்தை:

“இன்சா அல்லா”

4.

மொஹமட் தமிழ்நாடு வழியாக ஒரு மீன்பிடிப் படகில் மாலைதீவு சென்றடைந்தான். அங்கிருந்து ஏற்கெனவே செய்யப்பட்ட ஏற்பாடுகளின்படி மாலைதீவைச் சேர்ந்த ஒருவனாக கொழும்புப் பல்கலைக்கழகத்தில் படிக்கவந்தான். கொழும்பின் மத்தியில், செல்வாக்கான, அழகிய குறிச்சியான கறுவாக்காட்டில் நாலு அறை வீட்டை வாடகைக்கு எடுத்தான். பெரிய அறையில் தானிருந்துகொண்டு மிகுதி 3 அறைகளையும் கொழும்புப் பல்கலைக்கழகச் சர்வதேச மாணவர்களுக்கு வாடகைக்கு விட்டான். பொட்டம்மானின் செய்திக்காகக் காத்திருந்தான். அதே ஆண்டு ஜுன் மாதம் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நாலாண்டு பட்டப்படிப்பைத் தொடங்கிப் படித்துக்கொண்டிருந்தான். அங்கு நீர்கொழும்பு கத்தோலிக்கச் சிங்கள மீனவப் பின்னணிகொண்ட மாணவர்களோடு நெருங்கிப் பழகி அவர்களின் ஊருக்கும் போய் நெருக்கமானான். சொல்லப்பட்ட ஏற்பாடுகளைச் செய்தான். வன்னியிலிருந்து பொட்டம்மானின் செய்திகள் எதுவும் வரவில்லை.

வந்ததோ பத்திரிகைகளில் வந்த அவலச்செய்திகளே. அங்குலம் அங்குலமாக வன்னியைத் தலைவரும் பொட்டம்மானும் இழந்துகொண்டிருந்தார்கள்.  2008 நவம்பர் மாதத்தில் மொட்டம்மான் ஒரு சங்கேதச் செய்தி அனுப்பினார். “தலைவர் தீர்க்கமான முடிவுகள் எடுக்கமுடியாமல் திண்டாடுகிறார். நீ கவனமாக எனது செய்திக்காகக் காத்திரு” என்பதே அது.

மொஹமட் திட்டமிட்டபடி அவ்வாண்டு ஜுன் மாதத்தில் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம், சிங்கள இலக்கியம் முதலிய பாடங்களைப் போட்டு கலைமாணி பட்டம் படிக்கத் தொடங்கியிருந்தான்.  யுத்தச்செய்திகளைக் கேட்டுக் கலவரமடையாமல் பாடங்களில் மனதைவிட்டு மிக ஆர்வமாகப் படித்தான். அவனது சிங்கள இலக்கியப் பேராசிரியர் ரத்னபால தேரர் என்கிற ஒரு பௌத்தத் துறவி. மொஹமட்டின் அபார கல்வித் திறமைகளை உடனேயே கண்டுகொண்ட தேரர் அவனோடேயே பெருமளவு நேரங்களைச் செலவு செய்தார். தான் ஸ்ரீலங்காவில் தங்கியிருந்து இரத்தினக்கல் வியாபாரம் செய்த ஒரு மாலைதீவு வியாபாரிக்கு ஸ்ரீலங்காவிலையே பிறந்தவன் என்றும் ஐந்தாம் வகுப்புவரையும் கண்டியில் தமிழ்மொழியிலேயே தான் படித்ததாகவும், மாலைதீவு திவேனி மொழிக்கு நெருக்கமான  சிங்களத்தைத் தானாகவே படித்துக்கொண்டதாகவும்,  பின்னரேயே தன் குடும்பம் மாலைதீவுக்குப் போனதாகவும் மொஹமட் தேரருக்குப் பொய் சொல்லியிருந்தான்.

2009 சனவரி முதல் வாரத்தில் பொட்டம்மான் முதல் அனுப்பிய செய்தியையே அனுப்பி “எவ்வளவு மாதங்கள், ஆண்டுகள் சென்றாலும் நீ படிப்பைத் தொடர்ந்துகொண்டு எனது செய்திக்காகக் காத்திரு” என்று சொல்லியிருந்தார். கடைசியாக ஏப்ரல் மாத இறுதியில் மொஹமட்டே பொட்டம்மானைத் தொடர்புகொண்டான். அப்போதும் செய்திக்காகக் காத்திரு என்பதையே பொட்டு சொன்னார்.

பிறகென்ன யுத்தம் முடிந்தது. மொஹமட் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. தலைவரும் பொட்டம்மானும் சாகா வரம் பெற்றவர்கள் என்று நம்பினான். பிரபாகரனின் நிர்வாண சடலத்தைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது “பொய் பொய்” என்று தன் தலையிலடித்துக் கத்தினான். அன்றிலிருந்து பிரபாகரன், பொட்டம்மான் செத்ததைப் பற்றிய எந்தச் செய்திகளையும் பார்ப்பதையும் கேட்பதையும்  வாசிப்பதையும் முடியுமானவரை தவிர்த்தான்.

இப்போது மொஹமட்டுக்குத் தன்னுடைய பாதுகாப்பைப் பற்றிய பெரும்பிரச்சனை வந்தது. புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலையான புலிகளில் யாரோ ஒருவர் தன்னை இனங்கண்டு போட்டுக் கொடுக்கலாம்  என்று பயந்தான். மாலைதீவிலிருந்து கொழும்புக்கு வரும்போது அவன் முற்றாக உருமாறியிருந்தான். அசல் முஸ்லீமாக நெஞ்சுவரை தாடி வளர்த்து எப்போதும் இஸ்லாமியத் தொப்பி அணிந்திருப்பான். அதைவிட ஒரு போலிக் கண்ணாடியும். இருந்தும் தன்னுடைய குரலை வைத்தோ நடையை வைத்தோ யாராவது இனங்கண்டு கொள்ளலாம் என்று பயந்தான்.

யுத்தம் முடிந்தபின் ஏராளமான சிங்களவர்கள் யுத்தகளத்துக்குச் சுற்றுலா போனார்கள். கொழும்புப் பல்கலைக்கழக மாணவர்கள் வான் பிடித்துப் போனார்கள். சர்வதேச மாணவர்கள் போனார்கள். பேராசிரியர்கள் போனார்கள். ஒவ்வொரு முறையும் மொஹமட்  ஏதோ ஒரு சாக்குச் சொல்லித் தப்பிவிடுவான்.

கடைசியாக மொஹமட்டின் பேராசிரியர் ரத்ன தேரர் போகும் முறை வந்தது. தேரருக்கும் அவர் சீடன் மொகமட்டுக்குமிடையிலான வாரப்பாட்டில் ஒரு குறையுமில்லை. தேரரின் விகாரையும் கறுவாக் காட்டிலேயே இருந்தது. விகாரையிலிருந்து மொஹமட்டின் வீடு பதினைந்து நிமிட நடை தூரத்திலேயே இருந்தது. விகாரையில் தேரரின் அறையிலேயே பல இரவுகள் மொஹமட் நித்திரை கொண்டிருக்கிறான். பாளி இலக்கியங்கள், சிங்கள இலக்கியம், பௌத்த மெய்யியல் முதலியன பற்றி உரையாடியபடி தேரர் உணவு சமைப்பார். மாலைதீவு முஸ்லீம்கள் மது அருந்துவார்கள் என்பதும் மொஹமட் சர்வதேச மாணவர்கள் பலரைப்போல மதுப்பிரியன், புகைப்பிரியன் என்பதும் தேரருக்குத் தெரியும். யுத்தம் முடிந்த இறுதிவாரத்தில் மொஹமட் விரிவுரைகளுக்கு வரவில்லை. கலவரமடைந்த தேரர் அவனது செல் போனுக்கு அன்றிரவு  அடித்திருக்கிறார்.  அன்று மே மாதம் 25ஆம் திகதி 2009. மொஹமட் வாழ்வில் முதல்முறையாக மது அருந்தியது அன்றுதான். சிங்கன் வெளிநாட்டுத் தூதுவர்கள் மது அருந்தும் விலையுயர்ந்த மதுச்சாலையில் இருந்தான். அவன் தேரரின் அழைப்புக்குப் பதிலளித்தபோது பின்னணி இசையைக் கேட்ட தேரர்,

“உனக்கென்ன ஏதும் காதல் பிரச்சனையா? எந்தச் சாரயக் கடையிலிருக்கிறாய்? “

வாழ்வில் முதல்முறையாக நிறை வெறியில் இருந்த மொஹமட் சாராயக் கடையின் பெயரை உளறிவிட்டான்.

அடுத்த பத்து நிமிடத்தில் தேரர் அந்தச் சாராயக் கடையில் மொஹமட்டின் மேசையில் அவனோடிருந்தார். ஒரு ’அடிப்படைவாத’  முஸ்லீம் தாடியோடும் தொப்பியோடும் மது அருந்திக்கொண்டிருக்கிறான். அவனுக்குக்  காவி உடையில் பௌத்தத் துறவியொருவர் கம்பனி கொடுத்துக்கொண்டிருக்கிறார். வன்னியில் அக்கால உலகின் ஊடகங்களில் தலைப்புச்செய்தியாகும் போர் நடந்து கொண்டிருக்கிறது.  மது ரசத்திலிருந்த வெளிநாட்டுத் தூதூவர்கள் உண்மையிலேயே ஸ்ரீலங்கா ஒரு சோசலிஸ சனநாயகக் குடியரசு என்று நம்பினார்கள்.

இந்தச் சம்பவத்தின் பின் தேரர் மொஹமட்டுக்குக் கொடுத்த ஞானம்:

“மது அருந்துவது பிழையில்லை. தனித்து மது அருந்துவதுதான் பிழை”

பின்னர் தனது விகாரைக்கு மொஹமட்டை இரவு விருந்துக்கு அழைக்கிறபோதெல்லாம் தேரரிடம் ஒரு சாராயப்போத்தல் இருந்தது. முதலிரவு தேரரே போத்தலை உடைத்துக் குடுவையில் விட்டு மொஹமட்டுக்குப் பரிமாறினார்.

 “நீ குடித்துக்கொண்டு பேசிக்கொண்டிரு. நான் சமைத்துக்கொண்டு பேசுறேன்” என்றார். அப்படிச் சமைந்த உறவு.

ஒரு சனிக்கிழமை காலை பத்து மணிக்கு மொஹமட்டின் வீட்டு அழைப்பு மணியை தேரர் அழுத்தியோது அவன் தூங்கிக்கொண்டிருந்தான். போர்த்துக்கேசிய மாணவன் ஒருவன் கதவைத்திறந்து அலறியடித்துப்போய் மொஹமட்டை எழுப்பினான். தேரர் உள்ளே வந்து சொன்னார்.

“எங்கட விகாரையிலிருந்து துறவிகள் யாழ்ப்பாணத்துக்கும் முல்லைத்தீவுக்கும் போகிறம். நீ எங்களோடு வரவேணும்.”

நிறை வெறியில் நித்திரையிலிருந்த மொஹமட்டுக்கு இது தேவையா? அதிரச்சியிலிருந்து மீளாதவன்,

“எனக்கு விருப்பமில்லை. நடந்ததோ அதர்ம யுத்தம். இரு தரப்புமே யுத்தக்குற்றங்களைச் செய்தவர்கள். புலிகள் சொந்த மக்களையே பணயக்கைதிகளாகப் பயன்படுத்தினார்கள். சிங்களப்படைகள் சரணடைந்த போராளிகளையும் பெண்களையும் குழந்தைகளையும்  கொன்றன. இந்த யுத்தகளத்துக்குச் சுற்றுலா போகும் மனோநிலை என்னிடமில்லை.”

தேரர் கெஞ்சிப்பார்த்தார். “மொஹமட்  உனக்கு நன்றாகத் தமிழ் தெரியும். நடந்த யுத்த அதர்மங்களைத் தமிழ் மக்களிடமிருந்து விசாரிக்கத்தானே நாம் போகிறோம். ஒரு மனச்சாட்சியுள்ள சிங்களப் பௌத்தத் துறவியாக நான் அந்த மக்களிடம் பேசி மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன். என்னுடைய மொழிபெயர்ப்பாளராக நீ கட்டாயம் வர வேண்டும்.”

மொஹமட்டால்தான் போக முடியாதே.

தேரர் குழு இரண்டுவாரங்கள் வன்னி இறுதி யுத்தக்களங்கள், யாழ்ப்பாணம், அகதி முகாங்கள், புனர்வாழ்வு முகாங்கள் எல்லாம் போய்த் திரும்பிவந்தது. அதன் பின் சில இரவுகளை தேரரோடு விகாரையிலேயே மொஹமட் செலவிட்டான். தேரர் சொன்ன கதைகளை மிக ஆர்வமாகக் கேட்டான்.

“பிரபாகரன், பொட்டம்மான் ஆகியோர் இறக்கவில்லை என்று இன்னும் பல தமிழர்கள் நம்புகிறார்கள். நீ என்ன நினைக்கிறாய்?” என்று தேரர் கேட்டார்.

அதற்குப் பதிலில்லாது மொஹமட் சாராயக் குடுவையை எடுத்துக்கொண்டு வெளியே போய் நட்சத்திரங்களுக்குக் கீழ் சிகரெட் புகைத்தான். காட்டில்  நட்சத்திரங்களுக்குக் கீழ் ஒவ்வொரு வாரமும் இரண்டு நாட்கள்  பொட்டம்மானோடு நடந்த இனிய நினைவுகள் வந்தன. ஒரு எரிவெள்ளி வேகமாய்ப்போய் பிரகாசமான அல்பா, பீற்றா நட்சத்திரங்களடியில் மறைந்தது.  ஒருவேளை தலைவரும் அம்மானும் தவறிப்போயிருந்தால் இந்நேரம் வானத்தில்  அல்பா, பீற்றாபோல இரண்டு அருகருகே மின்னுகிற பிரகாசமான நட்சத்திரமாகியிருப்பார்கள் என்ற நினைப்போடு கடைசி தம்மை இழுத்து சிகரெட்டைக் காலடியில் போட்டு அணைத்தான்.

காத்திருப்பதைத் தவிர மொஹமட்டுக்கு வேறு வழியிருக்கவில்லை. மனத்தைத் திடமாக வைத்திருக்க அவன் ஐந்து வேளையும் தொழுவது  உதவியது. பகலில் மது அருந்துவதைத் தவிர்த்தவன். இரவு ஆரம்பமான இஷா தொழுகைக்கும்  அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முதலுள்ள பஜ்ர் தொழுகைக்கும் இடையிலேயே மது அருந்தினான். தேரரின் விகாரையிலும் இஷா அல்லது பஜ்ர் தொழுதிருக்கிறான். ரம்ழான் காலத்தில் அவன் நோன்பு முறிப்பதும் தொடங்குவதும்  தேரரின் விகாரையில்தான். அம்மாதத்தில் அவன் மது அருந்துவதில்லை. அவன் வாங்கிவரும் மாடு, ஆடு , கோழி இறைச்சிகளை தேரரே இரகசியமாகச் சமைத்துக் கொடுப்பார். விகாரையிலேயே படுத்துவிட்டு தேரர் முதலிரவு சமைத்த கறியை அதிகாலை  உண்டுவிட்டுக் கறிச்சட்டிகளைத் தானே கழுவிவிட்டு அவன் போய்விடுவான்.

தன்னுடைய பாதுகாப்புக் காரணங்களுக்காக மொஹமட் தனக்கு நண்பர்கள் உருவாகுவதைத் தவிர்த்தான். மூன்று நீர்கொழும்புக் கத்தோலிக்கச் சிங்கள மீனவ நண்பர்களும் தேரரும் மட்டுமே அவன் நண்பர்கள். அந்த மூன்று கத்தோலிக்க நண்பர்களுக்கும் அவனது வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த 3 சர்வதேச மாணவர்களுக்கும் (ஒரு போர்த்துக்கேசியன், ஒரு ஒல்லாந்தன், ஒரு ஆங்கிலேயன்) ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் தன்  கறுவாக்காட்டு வீட்டில் அவன் பார்ட்டி வைப்பான். ஆங்கிலேயனைத்தவிர மிகுதி ஐவரும் திறமையான சமையல்காரர்கள். போர்த்துக்கேசிய கிறில் சிக்கன், கிஸ்பானிய Paella- புறியாணி, நீர்கொழும்பு கடல் உணவுத் திரவியங்கள், மொஹமட் காசைக் கணக்குப் பார்க்காமல் வாங்கும் விலையுயர்ந்த வெளிநாட்டு சிங்கிள் மோல்ற் விஸ்கி, பிரெஞ்சு/கிஸ்பானிய வைன்கள், ஜெர்மானிய பியர்கள், பைலா பாட்டு, ஜாஸ் இசை, ஆங்கில, சிங்களப்  பாட்டுக்கள் என்று பார்ட்டி அமர்க்களமாக இருக்கும். வேறு நண்பர்களையோ பெண்களையோ வேசைகளையோ கூட்டிவரக்கூடாது என்பதுதான் மொஹமட் கண்டிப்பாக இட்ட ஒரேயொரு  கட்டளை.   பல்கலைக்கழகத் தொழுகை அறையில் தொழும் முஸ்லீம் மாணவர்கள் இவனோடு நண்பர்களாக இருக்க ஆசைப்பட்டார்கள். இவன் ’ஆம் இல்லை’ என்ற இரு வரிகளோடு அவர்களோடான கதையை முடித்துவிடுவான். அந்தக்காலத்தில் நீங்கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் படித்திருந்தால் காவி உடையில் ஒரு பௌத்தத் துறவியும் நிறை தாடி இஸ்லாமியத் தொப்பி கெட் அப்பில் மொஹமட்டும்  எப்போதும் சேர்ந்து  திரிவதைக்  கண்டிருப்பீர்கள். தேரரும் மொஹமட்டும் காதலர்கள் என்ற வதந்தியை முதலில் பரப்பியது முஸ்லீம் மாணவர்கள்தான்.

2013 இல் மொஹமட் First Class இல் சிங்கள இலக்கியக்  கலைமாணிப் பட்டத்தில் தேறினான்.  பட்டமளிப்பு விழா BMICH அரங்கில் நடந்தது. தேரரும் மொஹமட்டும் ஒரு காரில் போய் இறங்கினார்கள். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே பிரதம விருந்தினர் என்பதால் பலத்த பாதுகாப்பு இருந்தது. ஆனால் சனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் தேரரை உடல் தழுவிச் சோதனை செய்யவில்லை. கூடவந்த மொஹமட்டைப்  பார்த்துத் தயங்கிய பாதுகாப்பு அதிகாரிகளிடம் தேரர்,

“மகே புத்த தமாய். ஒண் நத்த” என்றார்.

மொஹமட்டையும் தழுவிச் சோதனை செய்யாமல் உள்ளே விட்டனர்.  அரங்கில் தேரருக்கும் மொஹமட்டுக்கும் ராஜ,மரியாதை. முதல் வரிசை பௌத்த துறவிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கும் தேரர்,

“மகே புத்த தமாய்” என்று சொல்லி மொஹமட்டை அருகில் அமரவைத்தார். அப்போதுதான் மொஹமட் அவதானித்தான். அவனது கைவிரல் நடுங்கத்தொடங்கியது. அவன் நெஞ்சும் துடிக்கத்தொடங்கியது. அவனது பெயர் சொல்லி அழைக்கப்பட்டபோது நடுக்கம் அதிகமானது. எழுந்து இருக்கையிலிருந்த தேரரின் காலில் விழுந்து வணக்கிவிட்டு மேடைக்குப் போனான். சனாதிபதி மகிந்த  அவனுக்காகச் சற்றுச் சிரம் தாழ்த்திப் புன்னகைத்தார். அவனுக்கான சிறப்புச் சலுகையாக அவனை   ஆரத்தழுவி முதலில் ஆங்கிலத்தில் “உன்நாட்டு ஜனாதிபதியும் ஒரு மொஹமட்தான். என் நண்பர்’’ என்றார். பிறகு சிங்களத்தில் “ரத்னபால தேரர் உன்னைப்பற்றிச் சொல்லியிருக்கிறார்” என்றார். பிறகு “நீ மிச்சம் தமிழ் கதைப்பாய்” என்று கொச்சைத் தமிழில் சொல்லிவிட்டு “நவீன சிங்கள இலக்கியத்தில்  Ph.D செய்ய உனக்குக் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் Scholarship வழங்குகிறோம். விபரங்களை தேரர் உனக்குச் சொல்லுவார்” என்று  ஆங்கிலத்தில் சொல்லி அவனுக்குப் பட்ட  மாலை  அணிவித்தார். பேரதிர்ச்சியில் செய்வதறியாது  மொஹமட் மகிந்தவின் காலைக் குனிந்து தொட்டு வணங்கினான்.

அன்றிரவும்  மொஹமட் தேரரின் விகாரையிலேயே தங்கினான். அந்தக் கைவிரல் நடுக்கம் நிற்கவேயில்லை. சாராயக் குடுவையைப் பிடிக்கும் போதும் கை நடுங்கியது. சிகரெட்டைப் பிடிக்கும்  போதும் கை நடுங்கியது.

 “நீ தினமும் குடிக்கிறாயா? ஏன் இப்படி கை நடுங்குகிறது”

என்று தேரர் கேட்டார்.

பொட்டம்மானிடமிருந்து ஓர் உத்தரவும் ஒரு கரும்புலி அங்கியும் இன்று இருந்திருந்தால் மகிந்தவைக் கொன்றிருப்பேனே என்ற ஆதங்கத்தை மொஹமட் தேரரிடம் சொல்லமுடியுமா?

5.

மொஹமட் 2014இல் புலமைப்பரிசிலை ஏற்றுக் கலாநிதிப்பட்டம் படிக்கத் தொடங்கினான். தேரர்தான் அவன் பேராசிரியர். 2018இ ல் படிப்பை முடித்துச் சிறப்பாகத் தேறினான். அவனோடு ஸ்ரபானியா என்ற உக்கிரேன் தேசத்துப் பெண்ணும் சிங்கள இலக்கியத்தில் கலாநிதிப்பட்டம் படித்தாள். அவள் இவனைக் காதலித்தாள். இவன் அவளைத் தவிர்த்துவிட்டு தேரரோடேயே உலாத்துவான். தேரர் இவனோடு நெருக்கமாயிருப்பதில் அவளுக்குப் பொறாமை.

“நீ தேரருக்கு ஓக்கிறாயா? தேரர் உனக்கு ஓக்கிறவரா” என்று பச்சையாகவே சீண்டுவாள். மொஹமட்டுக்குக் கோபமே வராது. ஒரு புன்னகையோடு கடந்துவிடுவான்.  2018 நடுப்பகுதியில் ஒரிரவு  படுத்த தேரர் எழுந்திருக்கவில்லை. மொஹமட்டின் அம்மம்மாவைப்போல நித்திரையிலேயே மாரடைப்பு. தலைவரினதும் பொட்டம்மானினதும் சாவை ஏற்றுக்கொள்ளாத மொஹமட்டுக்கு தேரரின் சாவு பேரதிர்ச்சி. அவனுக்கிருந்த ஒரேயொரு நண்பரும் இப்போதில்லை.

தேரர் சாவதற்கு ஒரு வாரம் முதல்தான் மொஹமட்டிடம் ஒரு நாள் காலை விகாரையில் அவனுக்கு விடை கொடுக்கும்போது

“ நான் யாரெண்டு உனக்கும் தெரியும். நீ யாரெண்டும் எனக்குத் தெரியும்” என்று சொல்லியிருந்தார். தேரர் ஞானி அல்லவா? ஞானிகளைவிடப் பெரிய ஒற்றர்கள் இருக்கமுடியுமா? (முன்னொருகாலம் தேரர் மொஹமட்டிடம் அவனது சிங்கள உச்சரிப்பு யாழ்ப்பாணத் தமிழனின் சிங்கள உச்சரிப்புப்போல இருக்கிறது என்று சொன்னபோதுதான் அவன் தேரரிடம் ஏற்கெனவே தயார் செய்துவைத்திருந்த – கண்டியில் தமிழ் மொழிமூலமே தான் ஆரம்பக்கல்வி பெற்ற- பொய்யை அவிழ்த்துவிட்டான்.)

தேரரின் சாவுக்குத் தான்தான் காரணம் என்று மொஹமட் நம்பினான். அவர் ஞானக்கண்ணால் தனது பின்னணியை அறிந்துவிட்டார். தனது துரோகத்தை அவரால் தாங்க முடியவில்லை. தன்னைக் காட்டிக்கொடுத்து சிறையிலடைக்கவும் அவரால் முடியவில்லை.  ஞானிகள் தற்கொலை செய்யவேண்டியதில்லை. அவர்கள் இறக்க விரும்புகிற தருணத்தில் இறைவன் அவர்களைத் தன்னிடம் அழைத்துக்கொள்வான் அல்லவா.

தேரரின் மரணச் சடங்கில் மொஹமட் சிங்களத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது துக்க மிகுதியால் மயங்கி விழுந்தான். ஸரபானியாதான் அவனைத் தாங்கினாள். அந்த மரண ஊர்வலத்தில் அவள்தான் அவனைக் கைத்தாங்கலாக நடத்திச் சென்றாள்.

மொஹமட் இரண்டு வாரங்கள் தினமும் குடித்தான். பிறகு சுதாரித்துத் தான் இனிச் செய்யவேண்டியது என்ன என்று யோசித்தான். போக்கிடமில்லாது அல்லல் பட்டவன் அப்போதுதான் பிரபாகரனினதும் பொட்டம்மானினதும் இறுதி நாட்களைப்பற்றி அறிய அவைபற்றி வந்த அத்தனை கட்டுரைகள்,  புத்தகங்களை வாசித்தான்.

எப்போதானாலும் தலைவரிடமிருந்தோ அம்மானிடமிருந்தோ அழைப்புக் கிடைக்கும் என்று பத்தாண்டுகள் தன் முயற்சியில் சற்றும்  தளராத விக்ரமாதித்தன்போல் வாழ்ந்தவனுக்கு இப்போது புதிய கதவுகள் திறந்தன.  பாதுகாப்புக் காரணங்களுக்காக அவன் எப்போதும்போல கொழும்பின் மத்திய குறிச்சிகளான கறுவாக்காடு, கொழும்புப் பல்கலைக்கழகம், விகாரமாதேவி பூங்கா, பொது நூலகம்  தவிர வேறு இடங்களுக்குப் போவதை முடியுமானவரை தவிர்த்துக்கொண்டான்.

 இந்தப் பத்தாண்டில் அவன் மூன்று தடவைகள் ’வீடு போகிறேன்’ என்ற சாட்டில் மாலைதீவுக்குப் பறந்திருக்கிறான். மாலே விமான நிலையத்தில் தரையிறங்கி ஹோட்டல்களில் தங்கிக் கச்சதீவைவிடச் சின்னஞ்சிறிய தீவுகளில்லாம் மேய்ந்திருக்கிறான். 

ஒரு பிறவி ஒற்றனான அவனுக்கு இப்போது இரவில் நித்திரை வருவதேயில்லை. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 18இல் கறுவாக்காட்டில் திறக்கப்பட்ட Spearmint Cafe என்கிற 24 மணிநேர மதுச்சாலைச் சத்திரம்  வரப்பிரசாதமானது.  மது அருந்திக்கொண்டு ஒவ்வொரு இரவும் அங்கு நள்ளிரவிலிருந்து விடிவதுவரை ஜாஸ் இசை கேட்டுக்கொண்டிருப்பான். Spearmint Cafe மனேஜரிலிருந்து பரிசாரகன் வரை எல்லோரும் அவனை ஒரு மாலைதீவு இளவரசனைப்போலவே நடத்தினார்கள். அவனும் பரிசாரகர்களுக்குத் தாராளமாக ரிப்ஸ் கொடுத்துவந்தான். 

உழவனைவிட உளவனுக்குப் பொறுமை அதிகம். அது மொஹமட்டுக்கிருந்தது. பத்தாண்டுகாலப் பொறுமை. 2019 மே 18 இரவு நள்ளிரவு அவன் சிறிது கலவரப்பட்டபடி Cafe க்குப் போனான். அடுத்த நாள் அவனது 29 வது பிறந்தநாள். அவன் கனவுகளை நம்புபவன். அன்று பின்னேரம் படுத்தபோது தலைவரும் அம்மானும் கனவில் வந்தார்கள். 

தலைவர் எதுவும் பறையவில்லை. ஒரு மந்தகாசப் புன்னகையோடு தலையாட்டினார். அம்மான்,

“பிரிகேடியர் மொஹமட், அந்த ஐந்து  லட்சம் டொலருக்கு நீ கணக்கு காட்டத்தேவையில்லை. தலைவரோட நான் காசிக்குப்போறன். அடுத்த பிறப்பில் மலரும் தமிழீழத்தில் சந்திப்போம். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

என்று மிகத் தெளிவாகச்சொன்னார். 

தனக்கு உயிரோடு இருக்கும்போதே கிடைத்த பிரிகேடியர் பட்டத்தால் அவன் பரவசப்பட்டான். புலிகளில் முதல் பிடிகேடியர் இறந்தபின் தமிழ்ச்செல்வனுக்குக் கிடைத்தது. இன்னமும் இறக்காத, வெடிக்காத கன்னிப் கரும்புலிக்கே முதல்முறையாக அம்மான் தலைவர் உடனிருக்க  பிரிகேடியர் பட்டம் கொடுக்கிறார்.

தேரர் இறந்தபின் மொகமட் கலவரத்தில் தானிருந்தான். அவனது வீட்டிலிருந்த மூன்று சர்வதேச மாணவர்களும் பட்டப்படிப்பை முடித்துத் தம் நாட்டுக்குச் சென்றுவிட்டார்கள். புதிதாக வேறு ஆண் சர்வதேச மாணவர்களை வாடகைக்கு அமர்த்தமுடியாமலும் பொட்டம்மான் தந்த  காசைத்  தேவையில்லாமல் வீட்டு  வாடகையில் விரயம் செய்யமுடியாமலும் திண்டாடிய மொஹமட் கிடைத்த மூன்று புதிய சர்வதேச மாணவிகளான சீனப்பெண்களை த் தன் வீட்டில் வாடகைக்குக் குடியேறவிட்டான். அந்த மூன்று கத்தோலிக்க நண்பர்களும்கூடப் பட்டத்தை முடித்து ஆசிரியர்  தொழில் கிடைத்துச் சிங்கள ஊர்களுக்குப் போய்விட்டார்கள்.  தலைவரும் பொட்டம்மானும் தப்பிவருவார்கள் என்ற நம்பிக்கையில் கத்தோலிக்க நண்பர்களின் நட்பைத் தொடர்ந்து பேணினான். ஒவ்வொரு நத்தார், கிறிஸ்மஸ் விடுமுறைகளுக்கும் நீர்கொழும்புக்கு விலையுயர்ந்த பரிசுப்பொருட்கள், மதுக்களோடு போய் அவன்களையும், அவன்களது குடும்பத்தையும் அசத்தினான்.

வேறு நண்பர்களின்றி  வேறு வழியின்றி அவன் ஸ்ரபானியாவுடன் நெருக்கமானான். ஒவ்வொரு வெள்ளி இரவும் ஸ்ரபானியாவும் அவனும் கறுவாக்காட்டு றெஸ்ரோறன்ற் ஒன்றில் உணவு உண்டார்கள். ஸ்ரபானியா ஒரு வைன் போத்தல் வாங்கிவருவாள்.  இந்த உறவு இதற்குமேல் நகர மொஹமட்டிடம் தயக்கங்கள்,  பயங்கள் இருந்தன.

“நீ உண்மையிலேயே தேரரின் காதலனா? நீ கோமோ செக்சுவலா? அப்படி இருந்தாலும் பரவாயில்லை. நீ அப்படியென்று குரானில் கைவைத்துச்  சத்தியம் பண்ணிக்கொடு. உன்னைத் தொந்தரவு செய்யாமல் விட்டுவிடுகிறேன்.”

என்று ஸ்ரபானியா கேட்ட வெள்ளி இரவொன்றில் மொஹமட் தான்  அப்படியில்லையென்று அவளுக்குச் சத்தியம் பண்ணிக்கொடுத்தான்.

“அப்ப நீ மூண்டு சின்ன சீனத் தேவதைகளை உன் வீட்டில் வைத்து அனுபவிக்கிறாயா” என்று மிக்க பொறாமையோடு கேட்டாள் ஸ்ரபானியா.

அவளின் கண்ணில் எரிந்த பொறாமை மொஹமட்டைச் சுட்டுப்போட்டது. அதற்குமேல் இருவரும் பறையவில்லை. ஸ்ரபானியாவே றெஸ்ரோறன்ற் கட்டணத்தைச் செலுத்திவிட்டுப் பேசாமல் நடக்கத்தொடங்கினாள்.

அவளின் வேகத்துக்குக் கட்டையன்  மொஹமட்டால் ஈடு கொடுக்கமுடியவில்லை. 13 நிமிடத்தில் தேஸ்டன் றோட் சர்வதேசப் பெண்கள் மாணவர் விடுதியை அடைந்தபோதுதான் அவள் மொஹமட்டைத் திரும்பிப்பார்த்தாள். அக்கணங்களில் நட்சத்திரங்களைவிடப் பிரகாசமாக ஜொலித்தது அவளது கண்கள்.  

 பிறகு ஒவ்வொரு இரவும் ஸ்ரபானியா அவனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினாள். அவன் பதில் போடவில்லை. பிறகு ஸ்ரபானியா ஆபாசமாகக் குறுஞ்செய்திகள் அனுப்பத்தொடங்கினாள்.

“தேரரின் சுண்ணியை ஊம்பிய நாயே. அதன் மணம், சுவை, தடிப்பை விபரி”

 என்று அவள் அனுப்ப நிறைவெறியில் ஸ்ரபானியாவின் குறுஞ்செய்திகளுக்கு அதே ஆபாசத்தோடு மொஹமட் பதில் அனுப்புவான்.

அவளும் பதிலுக்கு,

“சின்ன சீன தேவதைகளின் காதலனே!, ஒரு தடவையேனும் ஒரு ஐரோப்பிய  புண்டையை நக்கிப்பாரேன். உன்னோடு பேசும்போதெல்லாம் என் புண்டை ஈரமாகிவிடுகிறது.  இந்த ஈரத்தை உன் நாக்கு மட்டுமே துடைக்க வேண்டும். என்னுடைய சாமான் மயிரில் உன்  மீசையும்  தாடியும் சிக்குப்பட்டுப் பிடுங்கப்படும் இன்ப வலியை உன்னால் தரமுடியுமா?“ என்று அனுப்புவாள்.

பிறகு ஸ்ரபானியா தற்கொலை மிரட்டல்களை  ஆபாசத்தோடு அனுப்பத்தொடங்கியபோது மொஹமட் ஆடிப்போய்விட்டான்.

அன்று மதியம் பிரிகேடியர்  மொஹமட்டின் ஸ்மாட்போனில் ஸ்ரபானியா அனுப்பிய குறுஞ்செய்தி இப்படியிருந்தது:

“மொஹமட் இன்றிரவு காலியாகும் வரை நீ காலிமுகத்திடல் கடற்கரைக்கு வராவிட்டால் நான் கடலில் நடந்தே மாலைதீவுக்கு போவேன்.” 

வன்னியை விட்டு வெளியேறும்வரை கையிலடித்த  பாலியல் அனுபவம்கூட அவனுக்கில்லை.  2009 முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களின் பின் இன்றுவரை  அவன் ஆடிப்போய்விட்டான். வன்னி  தொடர்பில்லை. நித்திரை ஒழுங்காக இல்லை. 

 இப்ப இந்த உக்ரைனியப் பெண் அவனை வெகுவாகக் கலாய்த்துத்தான் விட்டாள்.

Spearmint Cafe ல் ஒரு பெரிய அரச மரத்துக்குக்கீழே அவன் அமர்ந்தவாறு பியர் குடித்துக்கொண்டிருந்தான். அது வளர்பிறைக்காலம். கடற்காற்று கறுவாக்காட்டுக்குள் வரத்தொடங்கிய நேரம். Cafe உரிமையாளர் எதேச்சையாக வருகிறமாதிரி வந்து அவனைக் குசலம் விசாரித்தார். வழமையாக ஜாஸ் இசை போகிற கபேயில் அன்றுமட்டும் பிரபல்யமான ஆங்கிலப்பாடல்கள் போய்க்கொண்டிருந்தன. அந்த வித்தியாசத்தை மொஹமட் உணர்ந்தாலும் அனுபவித்தான். 

 உரிமையாளர் பிறகு தன் பரிசாரகனைக் கூப்பிட்டு, 

“நமது cafe தொடங்கின நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் வரும் மொஹமட் நமது சிறப்பு விருந்தினர். எனக்கும் மொஹமட்டுக்கும் விருந்தும் பானங்களும் எங்கள் கணக்கில்,”    

என்று தானே ஓடர் கொடுத்து உரையாடத்தொடங்கினார். 

விலையுயர்ந்த ஒரு Single malt scotch விஸ்கியின் இரண்டாம் சேர்வ் பரிமாறப்பட்டோது அவர் மொஹமட்டிடம்,

 “அழகிய வெளிநாட்டுப் பெண்ணுடன் இந்த இரவைக் களிக்க விரும்புகிறாயா? எங்களிடம் மாறு லசனாய் ஐரோப்பிய, சீன இந்தியப்பெண்கள் இருக்கிறார்கள். செலவு அதிகமில்லை. நமது ரெஸ்ரோடண்டின் மேலறைகளிலேயே தங்குவதும் செலவுக்குள் அடங்கும். றெஸ்ரோறன்ட் ஒரு கவர் அப். உண்மையில் எங்கள் வருமானம் மேலே நடப்பதிலிருந்தே வருகிறது,”

என்றார். அக்கணத்தில் ஸ்ரபானியாவின் அழைப்பு மொஹமட்டுக்கு வந்தது அதிஸ்ரம். “ஒரு நிமிடம்” என்றவாறு எழுந்து கதைத்தபடி வெளியே வந்தான். அப்போது ராபி வில்லியம்ஸின் Better Man என்ற பின்வரும் பாடல் போய்க்கொண்டிருந்தது. 

“என்னை காதலிக்க 

யாரையாவது அனுப்புங்கள் 

நானொரு கைக்குழந்தை 

கொட்டும் மழையிலிருந்து 

என்னை காப்பாற்றுங்கள் 

எனக்கு வேணும் இளவேனிற்காலம் 

கடவுளே கூதிர்காலம் பயமுறுத்துகிறது. என் காலத்துக்கு முதலே 

நான் வயசாவது வெட்கமாயிருக்கு 

இந்த வலியில்  முதிர்கிறேன்

 கடவுளே

முடிஞ்சவரை 

நல்லவனாயிருக்க முயல்கிறேன்

இது எங்குற்றமா

என்  தவறுகளுக்கு 

நானே பொறுப்பென்று

சொல்லித்தான்  என்னை வளர்த்திருக்காங்க 

தேவதைகளில பாரத்தை போட்டுவிட்டு கண்ணீரோடு

ஊரை விட்டே ஓடப்போகிறேன் 

எப்ப நீங்க உங்கட காதலை கண்டு புடிக்கிறிங்களோ அப்பதான் உங்களுக்கு ஒரு வீடு தேடி ஓடுறீங்க”

அதே கணத்தில் தான் இனிமேல் இங்கு வரவேண்டாமென்றும் முடிவுசெய்தான். அவன் ஒரு கரும்புலியாக வெடிக்கும் தருணங்கள்தான் அவன் வாழ்வின் மிகப்பெரிய கனவு. அந்த நனவு கனவாவதை அக்கணத்தில் உணர்ந்தான். 

மொஹமட்டோடு தலைவர்  இறுதி போஜனம் உண்டு அவனை அனுப்பிவைக்கவில்லை.  அதுவொரு கெட்ட காலம். தலைவர் முக்கியமான முடிவுகள் எடுக்கமுடியாமல் தடுமாறிய காலம்.  பொட்டம்மான்தான் அவனோடு பன்றிக்கறியும், மரை வத்தலோடு அரிய காட்டரிசியும் (சட்டப்படி மண் சட்டியில்  விறகு  அடுப்பில் சமைத்தது)  உண்டனுப்பினார். யப்பானிய Cherry Blossom மலர்கள் வெடிப்பதுபோல அழகாக அவன் சுவர்க்கம் சேர்வான் என்பதை ஞாபகமூட்ட அம்மான் அப்போது ஜப்பானிய  செர்றி மலர்கள் முகிழ்த்து வெடித்துப் பறக்கும் அழகை ஜாஸ் இசைப்பின்னணியில்  போகும் பாடல் ஒன்றாகத் தனது மடிக்கணனியில் போட்டுக்காட்டி வன்னியில் ஒரு நிலவறையில் உணவு பரிமாறினார்.  அந்த இரவில்தான் பொட்டம்மான் மொஹமட்டின் மாவீரர்களான  பெற்றோரின் கோப்புக்களை எடுத்து அவனுக்கு அறிமுகப்படுத்தினார்.

 இந்த ஆண்டு சனவரிமாதக் கடைசியில் மொஹமட் விகாரமாதேவி பூங்காவில் ஸ்ரபானியாவுடன் தொலைந்து  நடந்தபோதுதான்   Sri Lankan Sakura மலர்கள் முகிழ்ந்து  வெடித்து பறப்பதைக்  கண்டான். அது அவனை மிகக்கலவரப்படுத்திய கணங்கள். அந்த நினைவோடு கறுவாக்காட்டிலிருந்து நடந்தே காலிமுகத்திடல் கடற்கரைக்கு நடக்கத்தொடங்கினான். காதலர்கள் தொலைபேசித் தொடர்பிலிருந்தார்கள். அது பின்னிரவு நிலவு.GOOGLE MAP GPS நடக்கும் தூரம் 57 நிமிடங்கள்  என்றது. மொஹமட் அக்கணத்தில் ஸ்ரபானியாவின் குரலில் அவள் வாசத்தை முகர்ந்தான். வெடிக்கும் தென்னம் பாளைகளினதும் கன்னிப்பெண்ணின் மூத்திரத்தினதும் வலையில் அகப்பட்டு இறந்தகணத்தில் மீனிலிருந்தும் வரும் ஸ்ரபானியாவின் அக்கண சுகந்தத்தைக் கடற்காற்று அவனிடம் சேர்ப்பித்தது. அந்த மணத்தை மோப்பம்பிடித்து வெறிகொண்டு  Google Map ஐ நம்பாது அவன் நடக்கத்தொடங்கினான். பாண்ஸ் பிளேசில் நடந்து விகாரமாதேவி பூங்கா வேலிபாய்ந்து புத்தசாசன அமைச்சு மதில் ஏறிக்குதித்து  Beira சின்ன ஏரியில் யேசப்பா தண்ணீரில் நடந்தமாதிரி கடந்து காலிவீதி கடந்து இந்தியத் தூதரகம் ஓரமாகப்போய் அவன் கோல்பேஸ் கடற்கரை சேர்ந்தான்.

மொஹமட் சயனைட்டை நஞ்சு மாலையாகக் கழுத்தில் அணிந்திருங்கவில்லை. சயனைட்டை ஊற்றுப்பேனாவின் மையாகத் தான் எப்போதும் கொண்டுசெல்லும் பேனாவுக்குள் ஒளித்துவைத்திருந்தான். அந்தப் பேனாவை Beira சின்ன ஏரிக்குள் இன்றிரவு  எறிந்துவிட்டிருந்தான்.

பொட்டம்மான் அவன் கனவிலும் போகக்கூடாது என்று எச்சரித்த ஸ்ரீலங்காவின் மிகப்பாதுப்பு வலயங்கள் எல்லாம் அவன் வெறும் 27 நிமிடத்தில் கடந்துவிட்டான்.

ஸ்ரபானியாவை மட்டும் காணவில்லை. அவன் மூக்கு சொல்கிறது அவள் அவன் நாக்கு எட்டும் தூரத்தில்தான் இருக்கிறாள் என்று. மோப்பத்தில் குழம்பிய ஒரு நாய் தலைசுற்றுமளவுக்குச் சுற்றுகிறமாதிரி அவன் சுற்றுகிறான். ஸ்ரபானியா

“நீ கட்டாயம் வருவாய் எண்டு எனக்கு தெரியும்”  என்கிற ரகசிய மந்திர குரலில் அவன் பின்னிருந்து அவன் கண்களைப் பொத்தினாள்.

பிரிகேடியர் மொஹமட் “வீடுபேறு” அடைந்த இரவு அது; மேமாதம், 19 ஆம் திகதி, 2019, அதிகாலை 3.19.

“எப்ப நீங்க உங்கட காதலை கண்டு புடிக்கிறிங்களோ அப்பதான் உங்களுக்கு ஒரு வீடு தேடி ஓடுறீங்க”                                  

-றாபி வில்லியம்ஸ்

(அகழ் சஞ்சிகையில் வெளியானது)

நட்சத்திரனின் வேறு சிறுகதைகள்

1. கர்னலின் காமம்

2. கமக்காரன்

3. பிரபாகரன் மாத்தையா

4. ஒரு நாள் கூத்து

Comments

  1. வாசிப்பை நிறுத்தாது தூண்டும் கதை. சில வலிந்து திணித்த கேலிகளையும் ஆபாசத்தையும் தவிர்த்தால் இன்னும் நல்லா வந்திருக்கும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

 யாழ் பல்கலைக்கழக உபவேந்தர், விரிவுரையாளர்களின்   கல்வி அறிவு மோசடிகள்

அவந்திகா: ஓர் அவல மனைவியின் வாக்குமூலம்