முருகையன்: நகலும் நாடகமும்

 


நட்சத்திரன் செவ்விந்தியன்

ஈழப்போர் முடிந்து சில வாரங்களில் முருகையன் இறந்தார். தமிழ்த்தேசியம் என்ற போர்வையில் புலிப் பாசிஸத்தை அறிந்து அறியாமலோ அல்லது தங்களது தனிப்பட்ட சந்தர்ப்பவாத நலன்களுக்காகவோ ஆதரித்து வரும் எழுத்தாளர்கள் வலைப்பதிவாளர்கள் முருகையனை ஒருபக்கச் சார்போடு விதந்துரைத்து அதிகளவில் முருகையனுக்கு அஞ்சலிக்குறிப்புக்களை எழுதியிருக்கிறார்கள். முருகையனும் புலிப்பாசிஸத்தை நியாயப்படுத்தி அதனது பிரச்சாரத்துக்கு உதவியவர் என்பதால் இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. தான் வாழ்ந்த சமூகத்தின் விமர்சகராக தன் காலத்தின் மனச்சாட்சியின் குரலாக முருகையன் இருந்தாரா? அவரது சமகாலத்து ஈழத்துத் தமிழ்க் கவிதைகளில் முருகையனின் இடம் என்ன? 

1986ம் ஆண்டு முருகையன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு துணை பதிவாளராகப் பணியாற்ற வருகின்றபோது தான் புலிப் பாஸிசத்திலிருந்து தனது சுயாதீனத்தை பேணிக்கொள்வதற்காக பல்கலைக்கழகம் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. இதே ஆண்டுதான் யாழ் பல்கலைக்கழக மாணவரான விஜிதரனை புலிகள் கடத்திச்சென்று சித்திரவதை செய்து கொன்றதன் மூலமாக பல்கலைக்கழகம் மீதான தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தினார்கள். மாற்று இயக்கங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் பலர் கல்வியை இடைநிறுத்தி ஓட வேண்டியிருந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் ஈழத்தமிழ் சூழலின் நிலமையினை விமர்சித்து “முறிந்த பனை” எழுதிய நான்கு யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்களில் முதன்மையானவரான ராஜினி திராணகம புலிகளால் கொல்லப்பட மீதிப்பேர் ஒதுங்க வேண்டியிருந்தது அல்லது தென்னிலங்கைக்கு தப்பிச்செல்ல வேண்டியிருந்தது. யாழ் பல்கலைக்கழக மாணவியும் கவிஞையும் நாடகவியலாளரும் பெண்ணியவாதியுமான செல்வி புலிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும் கவிஞரும் தன்னுடைய முதல் கவிதைத் தொகுப்புக்கு முருகையனிடமிருந்து முன்னுரையைப் பெற்றவருமான எம்.ஏ. நுஃமான் முஸ்லீம் என்ற ஒரே காரணத்துக்காக யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளால் கலைக்கப்பட்டார். நிலமை இவ்வாறு இருக்கும்போது நமது கவிஞர் முருகையனோ சற்றும் மனம் தளராது புலிப்பாசிச அரசியலுக்கு வெற்றுப்பிரச்சாரம் செய்யும் கவிதைகளையும் நாடகங்களையும் எழுதினார்.

 ‘தற்கொடை’ என்ற முருகையனின் கவிதையில் வள்ளுவரை கவிதைசொல்லி தெருவில் சந்தித்து வீட்டுக்கு அழைத்துச் செல்லுகிறார். வீட்டிலோ வள்ளுவர் தான் இயற்றிய புதிய அதிகாரத்தை கொடுக்கிறார். கவிதையின் இரண்டாவது பகுதி பின்வருமாறு 

தற்கொடை என்ப தமிழீழ மைந்தர்கள் நிற்கும் புதிய நிலை. 

தன்னுயிரை தான் ஈயும் சான்றாண்மை தற்கொடையாம் ஏன்ன நிகர் ஆகும் இதற்கு? 

ஓர்ம உரமும் துறவும் உறுதியுமே கூர்மதியோர் ஆவிக் கொடை 

கற்கண் டினிது பழங் கள் இனிதே என்பார்கள் தற்கொடையின் தன்மை தெரியார். 

ஆவி கொடுக்கும் அசையாத் திடம் கொண்ட வாலிபர்கள் வாழ்வதிந்த மண். 

சொந்த மண் மீளச் சுடுகலன்கள் ஏந்திடுவோர் தந்திடுவார் தங்களுயிர் தாம். 

நஞ்சைக் கழுத்தில் நகையாய் அணிவோரின் நெஞ்சம் நிரம்ப நெருப்பு. 

வெங்கொடுமைச் சாவும் விளையாட்டுக் கூடமாம் பொங்கு சினம் கொண்ட புலிக்கு. 

அச்சம் அறியார்: அடங்கார்: அவர்க்குயிரோ துச்சம்: எதிரி வெறுந்தூள். 

கொல்வோரை மோதிக் கொடுபட்ட இன்னுயிரை ஏல்லா உலகும் தொழும். 

இதைவிட நல்ல பிரச்சார முத்து புலிகளுக்குக் கிடைக்கப் போவதில்லை. இப்பிரச்சாரத்தின் முன் புலிகளின் ஆஸ்தானக் கவிஞரான புதுவை ரத்தின துரையே பிச்சைதான் வாங்கவேண்டும். மேற்கூறிய கவித்துவச் சிறப்பு எதுவுமில்லை. திருக்குறளின் வடிவத்தை பிரதிபண்ணி கவிதை பண்ணும் இவ்வுக்தி மிகவும் மலினமானதும் இலகுவானதுமான முயற்சி. வழமையாக பாடசாலை மாணவர்கள் பாலியல் வசை மொழிகளை இதே யுத்தியைப் பயன்படுத்தி உருவாக்குவதுண்டு. இதற்கு நல்ல உதாரணம்:

 எவ்வோழ் ஓழ்த்தார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை கள்ளோழ் ஓழ்த்தாருக்கு 

எட்டாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையான தமிழ்ப் புலமையுள்ள எந்தவொரு மாணவருமே இந்த வகையில் கவிதை கட்டமுடியும். இப்பருவ மாணவர்களையே புலிகளும் தங்களது ஆட்சேர்ப்புக்கு இலக்கு வைப்பதால்தான் முருகையனின் தற்கொடை கவிதை புலிகளுக்கு அற்புதமான பிரச்சார முத்து.

 முருகையன் யாழ்ப்பாண சனத்தொகையில் 50 வீதமான ஆதிக்க வேளாள சாதியைச் சேர்ந்தவர். அதிலும் சைவ உணவு மட்டுமே உண்ணும் சாதியின் உட்பிரிவைச் சேர்ந்தவர். ஈழத்தமிழரின் அதியுச்ச கல்வி கலாச்சார நிறுவனமான யாழ் பல்கலைக்கழகத்தின் முது துணைப்பதிவாளராக இருந்துகொண்டு தன்னுடைய ஐம்பதுகளின் இறுதியில் பாதி நரைத்த தாடி மீதி கவிஞன் நாடகாசிரியன் என்கிற படிமங்களோடும் யாழ் பல்கலைக்கழகத்தில் அதிகாரத்திலிருக்கிற பெரும்பாலானோர் மாணவன் மாணவிகளுடன் ஈடுபடுகின்ற பாலியல் லீலைகளில் சம்பந்தப்படாத நல்ல மனிதர் என்ற பெயரோடும் ‘தற்கொடை’ எழுதுகிறபோது இக்கவிதையின் உச்ச பிரச்சார பயன்பாடு சொல்லித்தெரிய வேண்டியதில்லை. 

புலிகளுக்காக முருகையன் எழுதிய இன்னொரு பிரச்சாரப் படைப்பு உயிர்த்த மனிதர் கூத்து என்கிற நாடகம். விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளனான க. சிதம்பரநாதனோடு சேர்ந்து கூட்டு முயற்சியாக இதனை எழுதினார். நாடகத்துறையில் தனக்குப் போட்டியாக இருந்த செல்வி புலிகளால் கொல்லப்பட்டதில் சிதம்பரநாதனுடைய பங்களிப்பும் இருந்திருக்கிறது. சிதம்பரநாதனுடைய முன்னைநாள் மேலாளரான அதிபர் ஆனந்தராஜா புலிகளாலால் கொல்லப்பட்டதில் சிதம்பரநாதனுடைய பங்களிப்பும் இருந்ததான ஒரு குற்றச்சாட்டும் உண்டு. உயிர்த்த மனிதரின் கூத்து பிரதியை வாசித்துப் பார்த்தால் பிரச்சார அம்சம் மட்டும் மேலோங்கும் மிகச்சுமாரானது என்பது புரியும். விடுதலைப் புலிகளின் ஆணைப்பிரகாரம்  எழுதப்பட்ட நாடகம் போலவேயுள்ளது.

ஸ்ராலின் போன்ற ஒரு கொடுங்கோலனை மிகச் சரியாகவே வெறுத்த மகத்தான ரூஷ்ய பெண்கவிக்குக்கூட அவருடைய மகன் “குலாக்” கொடுஞ்சிறையில் வதைக்கப்பட்ட போது ஸ்ராலினைப் போற்றிப் புகழ்ந்து கவிதை எழுத வேண்டியிருந்தது. ஆனால் புலிகளுக்குச் சேவகம் செய்ய வேண்டிய எந்த நெருக்கடிகளும் முருகையனுக்கு இருந்ததில்லை. ஏ. ஜே.கனகரட்னா போன்ற உன்னத மனிதர்கள் புலிகள் பற்றிய மிகத்தெளிவான விமர்சனங்களையும் சிந்தனைகளையும் தங்களுக்கு மிக நெருக்கமானவர்களிடமே பகிர்ந்து கொண்டு இதே யாழ்ப்பாணத்தில் கௌரவம் அறம்சார் வீரம் நேர்மையோடு வாழ்ந்திருக்கிறார்கள். “ஊருக்குத்தானடி உபதேசம் உனக்கல்லடி கண்ணே” என்பதற்கிணங்க ஒரு Hypocrite ஆக இயங்கி புலிகளின் பாசிசத்தை நியாயப்படுத்தி புலிகளின் அனுதாபிகளாகவும் புலிகளின் பிரச்சாரகர்களாகவும் செயற்பட்ட பேரா. சிவத்தம்பி மு. பொன்னம்பலம், சு. வில்வரத்தினம் போன்றவர்களின் அணியிலேயே முருகையனும் வருகிறார். 

முருகையனுக்கும் மேற்கூறியவர்களுக்கும் பிரபாகரனுடைய போராட்டத்திற்குப் “பதமான” பதின்ம வயதுக் குழந்தைகள் இருந்தார்கள். இவர்கள் அனைவருமே புலிகளின் பிரச்சாரத்துக்கு ஆட்பட்டு தங்களது குழந்தைகள் புலிகளில் இணையக்கூடாது என்பதற்காக அவர்களை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து கூட்டிவந்து கொழும்பு சென்னை முதலிய இடங்களில் வைத்து வளர்த்து சிறந்த பல்கலைக்கழக கல்வி பெறுவதை உறுதிப்படுத்தினார்கள். முருகையனுடைய பெண் திருமணமாகி கொழும்பில் சந்தோசமான குடும்ப வாழ்விலிருக்கிறார். முருகையனுடைய பையன் நிரந்தரமான ஒரு உளநோயாளி. ஆம் இது “போராட்டத்தில்” விலக்குப்பெறுவதற்கான நியாயத்தை வழங்குகிறது. ஆனால் மறுபக்கத்தில் ஒரு உளப்பாதிப்புள்ள மகனின் தந்தையான முருகையனுக்கு என்ன குறைபாடுகள் இருந்தாலும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை எவ்வளவு அருமை பெருமையாகச் சீராட்டி வளர்ப்பார்கள் என்பது சொல்லிக்கொடுத்துத் தெரிய வேண்டியதில்லை. அப்படிப்பட்ட முருகையன் மற்றவர்களுடைய குழந்தைகளை ஒரு தனி மனிதனின் நலனுக்காக நடத்தப்பட்ட பாசிசப் போராட்டத்திற்கு தாரை வார்த்துக் கொடுபடுவதற்காக பிரச்சாரம் செய்ததை புரிந்துகொள்வது எவ்வாறு? (முருகையனும் ஒரு உளநோயாளி. அவ்வப்போது நோய் முற்றுகிறபோது சிகிச்சை இளைப்பாறலுக்குச் சென்றுவிட்டு மீளவும் தேறி சித்த சுவாதீனமுள்ள மனிதராக மீண்டு வருகின்ற அளவில் தன் நோயை அவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்) 

இந்த இடத்தில்தான் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஒரு மாயையிலிருந்தாலும் நியாயமானதாக நம்பியவரும் முருகையனைப் போன்ற hypocrite அல்லாதவருமான நேர்மையான மனிதனும் கவிஞரும் சொல்லப்பட்ட தமிழாசிரியருமான பண்டிதர் பரந்தாமன் வருகிறார். பகுத்தறிவுத் தந்தை என வர்ணிக்கப்படும் தென்புலோலியூர் கந்த முருகேசனார் இவருடைய குரு. ஹாட்லிக்கல்லூரியில் நான் படித்த காலப்பகுதியில் இவர் ஆசிரியராக இருந்தாலும் இவரிடத்தில் தமிழ் படித்திருக்ககூடிய பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. இரண்டாம் ஈழப்போர் தொடங்கிய தொண்ணூறுகளில் தன்னுடைய நாற்பதுகளிலிருந்த பண்டிதர் ஆசிரியர் வேலையைவிட்டு விலகி முழுநேர உறுப்பினராக சீருடையணிந்து புலிகளில் இணைந்தார். சங்க காலக் கவிதைகளில் ஒரு அதிபதியான பரந்தாமனின் பொற்காலமும் சங்ககாலத்திலேயே இருந்தது. விடுதலைப் புலிகளின் பொற்காலமான தொண்ணூறுகளில் புராதன சங்ககாலம் “தமிழீழத்தில்” re enact பண்ணப்படுவதாக ஒரு குழந்தையின் முகச்சாயலைக் கொண்டிருந்த பண்டிதர் உண்மையிலேயே நம்பினார். சங்ககாலத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்த பண்டிதர் சங்ககால மொழியையும் பதங்களையும் கொண்டு பிரச்சாரமில்லாத சில நல்ல கவிதைகளையும் எழுதியுள்ளார். பண்டிதர் பரந்தாமனுடைய மகனும் வேறொரு பிரிவில் எங்கள் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். அவனும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளில் போய்ச் சேர்ந்தான். மகன் புலிகளில் இணைவதை பண்டிதர் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஊக்குவித்திருந்தார். அதுமட்டுமின்றி தன் மகன் இணைந்ததை மிகப்பெருமையாகச் சொல்லியும் திரிந்தார். புலிகள் யாழை விட்டு வன்னிக்குச் சென்றபோது பண்டிதரும் வன்னிக்குப் போனார். ஈழப்போர் முடிந்தபின் புனர்வாழ்வுபெற்று இப்போது தன் ஊருக்கு திரும்பி நன் எஞ்சிய நாட்களை வாழ்கிறார். அந்தணன்-அவர் மகன் ஊருக்கு திரும்பவில்லை.

                     பண்டிதர் பரந்தாமன் 

பின்வருவது பண்டிதரின் நல்ல கவிதையொன்று.

 நல்லையல்லை நெடுவெண்ணிலவே 

இல்லும் இழந்தனம் 

ஊரும் இழந்தனம் 

ஏல்லாம் இழந்தே ஏதிலியர் ஆனோம் வேற்றூர் தன்னில் வெய்யிலுக்கொதுங்கல் போற்றெருவோரம் புளியோ வேம்போ ஆலோ அரசோ அருநிழல் தேடி

 ஓலை மறைப்பில் உழலும் வாழ்க்கை ஒழியுநாள் வருமோ?

 முன்னாள் எம்மூர் உழுது வித்திய

 பழனச் செந்நெல் 

அலைகடற் படுத்த விளைமீன் குழம்பொடு ஆர உண்டே மூரல் முறுவலர் 

சேர இருந்து திங்கள் சொரிந்த 

பாலொழிப் பரப்பில் மாலைத் தென்றல் முல்லை நறுமணம் முகந்து வீச 

மேனி சிலிர்ப்ப இன்பில் மிதந்த 

எழில் வாழ்வு கழிந்தது மாதோ 

இன்னாள் ஏர்க்களம் யாவும் 

போர்க்களம் ஆன வாரியிடையே 

வலைஞர் செல்லார் 

குயிலும் கோழியும் கூவல் மறந்தன கிள்ளை மழலையும் கேளா

 நல் ஆன் கன்று துள்ளா கறவை சுரவா எல்லாம் அழுக்காறுடையான் உள்ளம் போல் புல்லென்றாகிப் போன யாமோ கடுவெயில் அருவழி நெடுந்தொலை ஏகி 

கான விறகு கட்டி விற்கும் 

அல்லல் வாழ்க்கையே ஆனோம் 

இங்ஙன் சிறுவர் மகிழார் 

இளையோர் நயவார்

 பாடுநர் நோக்கார் 

பகையறக் களத்தில் ஆடுநர் வேண்டார் நீடொழி பரப்பி மெல்ல வானில் வருகுவை நல்லை அல்லை நெடுவெண்ணிலவே 

பண்டிதரோடு முருகையன் வகையறாக்களை ஒப்பிட்டுப் பாருங்கள். முருகையன் யூன் 27 ல் கொழும்பில் இறந்தபோது உடனடியயாக அவரைப் போற்றிப் புகழ்ந்து அஞ்சலி அறிக்கை விட்டவர்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவர். தேவானந்தாவை பல தடவைகள் கொல்ல முயன்ற புலிகள் குறைந்த பட்சம் இரு தடவைகளேனும் பெண் தற்கொலைதாரிகளைப் பயன்படுத்தி அவரைக்கொல்ல முயன்றுள்ளனர். தேவானந்தாவோ தற்கொலைக் குண்டுதாரிகளை நியாயப்படுத்தியும் பிரச்சாரப்படுத்தியும் கவிதை எழுதிய முருகையனை போற்றிப் புகழ்ந்ததானது பெருந்தன்மையாலோ அறியாமையாலோ அல்ல. முருகையன் இறந்து சரியாக ஆறு நாட்களின் பின் புலிக் காய்ச்சலிலிருந்து மெல்ல மெல்ல மீண்டுவரும் யாழ் பல்கலைக்கழகத்துள் சண்டை சச்சரவு இல்லாமல் நுழைவதற்கு தேவானந்தாவுக்கு முருகையனை போற்ற வேண்டியிருந்தது. மேலும் இது வாக்குப்பெறுவதற்கான ஒரு மலினமான அரசியல் நடவடிக்கையும் கூட. மறைத்தும் மறந்தும் கடந்து செல்லுதல் அல்ல reconciliation என்பதை தேவானந்தா உணரவேண்டும்.

 40 களில் ஈழத்து நவீன கவிதை மஹாகவியுடன் தொடங்கியது. மஹாகவி முதல் தலைமுறைக்கவிஞர். 50 களிலிருந்து கவிதை எழுதிவரும் நீலாவணனும் முருகையனும் இரண்டாவது தலைமுறைக் கவிஞர்கள். (பார்க்க: பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் என்ற நூலின் முன்னுரை). நவீன ஈழத்துக் கவிதையின் பிதாமகரான மஹாகவியின் கவிதைகள் அசலானவையும் தரத்தில் மிக உயர்வானவையும் ஆகும். இவருக்குப் பின்னர் வந்த நீலாவணனும் முருகையனும் பல சுமாரான கவிதைகளை எழுதியுள்ள போதும் நீலாவணனின் சிறந்த கவிதைகள் முருகையனின் சிறந்த கவிதைகளைவிட தரத்தில் உயர்வானவைகள். முருகையனில் அசலைவிட நகல்தான் அதிகமாக இருக்கிறது. முருகையனின் படைப்புக்களில் வேறொருவரின் படைப்பை தழுவி அல்லது மொழிபெயர்த்து அல்லது வடிவம் மாற்றி எழுதியiவைதான் சிறப்பாக இருக்கின்றன. ஆனோல்ட் வெஸ்கர் என்ற பிரித்தானிய நாடகாசிரியரின் உருவகக்கதையொன்றை தழுவியே ஆதி பகவன் என்ற நெடுங்கவிதையை எழுதியுள்ளார். ஆதிக் கிரேக்க நாடகாசிரியரான Sophocles இனது நாடகங்களான Antigone, Oedipus Rex என்பவற்றை தழுவி குனிந்த தலை தந்தையின் கூற்றுவன் ஆகிய நாடகங்களை எழுதியுள்ளார். Bertolt Brecht இன் Life of Galileo வை தழுவி கலிலியோவை எழுதியுள்ளார். அன்ரன் செக்கோவின் Enemies என்ற சிறுகதையைத்தழுவி இருதுருவங்கள் என்ற நாடகத்தை எழுதியுள்ளார். 

Terry Eagleton எழுதிய The Illusions of Post Modernism என்ற கட்டுரையை முருகையன் முதலாளியத்தின் மறுபக்கம் என்ற தலைப்பில் மொழிபெயர்த்துவிட்டு “பின் நவீனத்துவம் மாயைகளைக் கட்டவிழ்த்தல்” என்ற புத்தகத்தில் தனது கட்டுரையாகப் போடுகிறார். 

தான் சுயமாக எழுதிய நாடகங்களோடு தான் மொழிபெயர்த்த நாடகங்களையும் தான் எழுதிய நாடகம் போன்ற மாயையோடு சேர்த்துத் தொகுக்கிறார். முருகையனுடைய அகராதியில் தழுவலுக்கும் மொழிபெயர்ப்புக்கும் வித்தியாசமில்லை. மொழிபெயர்ப்பு சரியாக செய்ய முடியாவிட்டால் தழுவல் என்றும் தழுவல் திருட்டல்லவா என்ற குற்றச்சாட்டு வந்தால் மொழிபெயர்ப்புத்தான் என்றும் சொல்லித்தப்பலாம். உண்மையில் இவை அப்பட்டமான இலக்கியத் திருட்டுக்கள். ஐரோப்பிய மொழியொன்றில் இந்தத்திருவிளையாடல்களை முருகையன் செய்திருப்பாராயின் ரெறி ஈகிள்ரனின் பதிப்பாளர் முருகையன் மீது வழக்குத்தாக்கல் செய்திருப்பார். 

முருகையனின் சொந்த நாடகங்கள் மிகச்சுமாரானவையாக இருக்கின்றன. அதிலும் ‘வந்துசேர்ந்தன’ போன்ற நாடகங்கள் வேடிக்கைக்குரிய வகையில் பாடசாலை மாணவர்கள் எழுதுகின்ற தரத்தில் இருக்கின்றன. செய்யுளில் (Verse) எழுதிவிட்டால் மட்டும் அது நல்ல நாடகமாகிவிடாது. ஆனால் நல்ல நாடகம் நாடகப்பிரதி பற்றிய புரிதல் இல்லாத ஒருவருக்கு செய்யுளில் எழுதப்பட்டது நல்ல நாடகப்பிரதி என்ற பிரமையைக் கொடுக்கக் கூடியது. முருகையனின் கவிதைத் தொகுதிகளிலுள்ள 80 வீதமான கவிதைகள் மிகச் சுமாரானவைவும் தனித்தன்மை இல்லாதவையும். ‘அகிலத்தின் மையங்கள்’ எழுதிய முருகையனால்தான் மேற்கூறிய 80 வீதமான கவிதைகளும் எழுதப்பட வேண்டுமல்ல. மேமன் கவி அப்துல் ரகுமான் போன்ற மூன்றாந்தரமான ஒரு கவிஞராலோ சாதாரணமான தமிழ்ப் புலமையுள்ள ஒருவராலோ மேற்கூறிய 80 வீதமான கவிதைகளை எழுதமுடியும். முருகையனிடம் சொந்தச் சரக்கு இல்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? 

துரதிஸ்ட வசமாக மஹாகவியும் நீலாவணனும் தங்களுடைய 44 ம் வயதிலேயே மரணமடைந்துவிட்டதால் மூத்த கவிஞர் என்ற பதவி முருகையனுக்கு போட்டியின்றிக் கிடைத்தது. அவரது கவிதைகளின் தரத்தின் அடிப்படையிலன்றி வயது ஆங்கில மொழிப்புலமை அதிகாரம் மிக்க பதவிகளிலிருந்தமை என்பனவே முன்னணிக் கவிஞர் என்ற அடைமொழியை முருகையன் அடையக்காரணமாக இருந்தது. இந்த உண்மையை ஏற்றுக்கொண்டால் தங்களின் உக்கிப்போன கோவணங்களின் நாறல் அம்பலத்திற்கு வந்துவிடும் என்பதால் ‘ஒறிஜினல்’ பேராசிரியர்களான சிவத்தம்பியும் சிவசேகரமும் முருகையனுக்கு எழுதிய அஞ்சலிகளில் மகா பொய்கள் சொல்லியுள்ளனர். சிவத்தம்பி கைலாசபதியோடு சேர்ந்து மஹாகவியை இருட்டடிப்புச் செய்தவர். சிவசேகரம் மஹாகவியை இருட்டடிப்புச் செய்த கைலாசபதிக்கு வக்காலத்து வாங்கியவர். 

எந்தவொரு அசலான கலைஞனும் ஒரு சித்தாந்துத்துக்குள் (Doctrine) சிறைப்பட்டுப் போகமாட்டான். மார்க்ஸியம் ஒரு சித்தாந்தம். இதன் காரணமாகத்தான் மஹாகவியும் நீலாவணனும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற பிரச்சார இலக்கியத்தை முதன்மைப்படுத்திய கிளப் (club)களில் தங்களை இணைக்கவில்லை. மேலும் அசலான கலைஞர்கள் என்பதால் கைலாசபதி சிவத்தம்பி போன்ற Literary cognition (இலக்கிய ஞானம்) ஐ அரிதாக உடையவர்களிடம் சேவகம் செய்து இலக்கிய அந்தஸ்து பெறவேண்டிய தேவையும் அவர்களுக்கு இருந்ததில்லை. அடிப்படையில் மஹாகவியும் நீலாவணனும் முற்போக்காளராய் இருந்தார்களே தவிர பிற்போக்காளராயும் வலதுசாரிகளாயும் இருக்கவில்லை. நகல் கவிஞரான முருகையனோ கைலாசபதி சிவத்தம்பிக்கு சேவகம் செய்தார். மார்க்ஸியக் கிளப்பின் சீன சார்பு chapter ஆன தேசிய கலை இலக்கியப்பேரவையின் உறுப்பினர் முருகையன். 

            தேசிய கலை இலக்கிய கிளப்

இந்த மார்க்ஸியக் கிளப் களுக்கும் சாயிபாபா கிளப் மற்றும் மோட்டார் வண்டிக் கிளப்புக்களுக்கும் (Bikie clubs) பெரிய வித்தியாசங்களில்லை. இவ்வகையான இலக்கிய மார்க்ஸிய கிளப்புக்கள்தாம் குழுமனப்பான்மை முதுகுசொறிதல் காரணமாக உண்மையான இலக்கியத்தை சீரளிப்பவர்கள். இந்த அடிப்படையிலேயே சிவத்த தம்பியும் சிவத்த சேகரமும் முருகையனுக்கு எழுதிய புனைவுசார் அஞ்சலிகளை புரிந்துகொள்ள முடியும். சிவத்த சேகரத்தார் “குறுகிய தமிழ்த் தேசியவாதத்திற்கு பலியாகாமல் அவரால் முழுமையான ஒரு மனிதநேயவாதியாக விருத்தியடைய முடிந்தது.“ என்று முருகையனைச் சொல்கிறார். தேசிய கலை இலக்கியப்பேரவை பதிப்பித்த முருகையனின் கவிதை தொகுப்பில் “தற்கொடை” என்ற அவரது கவிதையும் முருகையனின் நாடகங்களின் தொகுப்பு நூலில் “உயிர்த்த மனிதர் கூத்து” என்ற புலிப்பிரச்சார நாடகமும் தவிர்க்கப்பட்டு உத்தியோக பூர்வமாக சுயதணிக்கை செய்யப்பட்ட பின்னர் சேகரத்தார் நம் காதில் பூச்சுற்றுகிறார். முருகையன் குறுகிய தமிழ்த் தேசியவாதத்துக்குப் பலியாகியிருந்தாலும் மன்னிக்கலாம். முருகையன் அதைவிடக் கேவலமாகிப்போய் புலிப் பாசிஸத்துக்கல்லவா பலியாகியிருக்கிறார். சேகரத்தார் மேலும் உன்மத்தம் கொண்டு “முருகையனுடைய கவிதைகள் ஈழத்துத் தமிழ்க் கவிதை தனது உச்சங்களை எட்டிய காலப் பகுதியில் எழுதப்பட்டவை. ஈழத்துக் கவிதையை அதன் உச்சங்கட்குக் கொண்டு சென்றவற்றுள் அவரது கவிதைகளுக்கு ஒரு பெரும் பங்குண்டு. அவற்றின் சிறப்பை அறிந்ததனாலேயே பேராசிரியர் கைலாசபதி அவரைக் கவிஞர்கட்குக் கவிஞர் என்று கூற முற்பட்டார். அக்கூற்று இன்று வரையுங் கூட செல்லுபடியானது” என்கிறார். இதைவிட தம்பியும் சேகரமும் முருகையனை பாரதிதாசனுக்கு ஒத்தவராக அல்லது அவரையும் மீறியவராகக்காட்ட முற்பட தம்பியோ முருகையனைக் கொண்டுபோய் மஹாகவிக்கு அருகில் வைக்க முற்பட்டிருக்கிறார். நவீன தமிழிலக்கியத்தில் மஹாகவி ஒரு இரத்தினக்கல் என்றால் முருகையன் ஒரு கூழாங்கல். 

    புட்டினிடம் விருதுபெறும்        மிஹல்கோவ்

2009 ஆகஸ்டு 27 ம் திகதி சேர்ஜி மிகல்கோவ் என்ற ரூஷ்ய கவிஞர் இறந்தார். அவர் கிரெம்ளினில் ஆயுட்கால ஆஸ்தான கவி. முதலில் அவர் சோவியத் தேசிய கீதத்துக்கு இரண்டு வகையான பாடல்களை எழுதினார். ஸ்ராலின் உயிரோடு இருந்த போது ஸ்ராலினை மகிமைப்படுத்தி எழுதியது ஒன்று. ஸ்ராலின் இறந்தபின்னர் ஸ்ராலினை புறக்கணித்து எழுதியது மற்றது. சோவியத் உடைந்த பின்னரும் ரூஷ்ய அதிபர் பூட்டினின் கட்டளைக்கிணங்க அதே பழைய சோவியத் மெட்டுக்கு மூன்றாவது முறையாகவும் ரூஷ்ய தேசிய கீதத்துக்கான பாடலை எழுதினார். அவர் சேவகம் செய்த எல்லா ஆட்சிகளும் அவருக்கு பதக்கங்களை வழங்கின. மிகல்கோவ் இறப்பதற்கு சரியாக 2 மாதங்களுக்கு முதல் யூன் 27 ல் இறந்த முருகையனோ மிகல்கோவையே விஞ்சிய சேவக்காரன். ருஷ்ய ஆட்சிகளுக்கு சேவகம் செய்த மிகல்கோவ் ஒருபோதும் ரூஷ்யர்களின் எதிரிகளான ஜெர்மானிய நாசிகளுக்கு சேவகம் செய்யவில்லை. முருகையன் அதற்கொப்பானதை செய்திருக்கிறார். முருகையன் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முதலே பிரபாகரன் மண்டையில் போடப்பட்டு விட்டதால் முருகையனுக்கு மாமனிதர் பட்டம் கிடைக்கவில்லை. ஆனால் இலங்கை அரசின் அதியுயர் இலக்கிய விருதான சாகித்ய ரத்னா விருது (இடது சாரிக்கட்சிகள் கூட்டணி ஆட்சியிலிருந்தபோது முருகையனின் இடதுசாரித் தொடர்பாலேயே இவ்விருது) முருகையனுக்கு 2007 ல் வழங்கப்பட்டபோது அவர் அதனை ஏற்றுக்கொண்டார். விடுதலைப் புலிகளையும் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிகளையும் நியாயப்படுத்தி ‘தற்கொடை’ எழுதிய முருகையனுக்கு இலங்கை அரசு இவ்விருதைக் கொடுத்திருக்கிறது. (இலங்கையின் புலனாய்வுப்பிரிவினர் 9 மணியிலிருந்து 5 மணி வரையான பகல்வேளைகளில் மட்டுமே தொழில் செய்வார்கள் என்று சக கவிஞர் ஒருவர் என்னிடம் ஒருமுறை சொல்லியிருக்கிறார். சிங்களவர்களுக்கு மேல் வீடு இல்லை என்று பிரபாகரனின் மதியுரைஞர் இலண்டன் சீமையில் பேசியிருக்கிறார்.)

தொடர்பான கட்டுரைகள்

1. கருணாகரனும் நாற்பது திருடர்களும்

2. பாலசிங்கத்தின் பாணபத்திர ஓணாண்டிகள்

3. புண்டை ஆண்டியார் கவிஞர் சேரன்

Comments

Popular posts from this blog

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

 யாழ் பல்கலைக்கழக உபவேந்தர், விரிவுரையாளர்களின்   கல்வி அறிவு மோசடிகள்

அவந்திகா: ஓர் அவல மனைவியின் வாக்குமூலம்