மேதகு: வரலாற்றுப் புரட்டு விளம்பரம்


நிராயுதபாணிகளைக் கொல்லும் கொலையாளியாக ஈழப்போராட்டத்திற்குள் வந்த பிரபாகரன் ஒரு போர்வீரனோ(Soldier) மாவீரனோ அல்ல. துரையப்பாவிலிருந்து அவரால் தனிப்பட்டரீதியில் கொல்லப்பட்ட இலங்கை பொலீசார், செட்டி, கனகரத்தினம் MP முதலிய கொலைகளில் கொல்லப்பட்டவரகள் நிராயுதபாணிகளாகவே இருந்த சமயங்களிலேயே நடந்தது. ஆயுதபாணிகளாக இருந்த படையினரை ஒருபோதுமே பிரபாகரன் தன்னந்தனியனாக தாக்கி கொன்றதில்லை. பிரபாகரன் தன் வாழ்நாளில் எந்த ஒரு சமரிலும்(Battle) பங்குபற்றியவர் அல்ல. எந்த ராணுவமுகாம் பொலீஸ் நிலையத்தாக்குதலிலும் பங்குபற்றியவர் அல்ல.



நட்சத்திரன் செவ்விந்தியன் 

வரலாற்று ஆளுமையையோ வரலாற்றுச் சம்பவத்தையோ வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் இரண்டு வகையானதாக இருக்கலாம். ஒன்று முற்றிலும் விபரணப்படமாக இருப்பது. இதற்கு உதாரணம் புலிகளால் கொல்லப்பட்ட மனித உரிமைப் போராளியும் பல்கலைக்கழக விரிவுரையாளரும் மருத்துவருமான ராஜினி திராணகமவின் வரலாற்றை வைத்து எடுக்கப்பட்ட No More Tears என்ற படம். இதில் ராஜினியின் பாத்திரமாக மட்டுமே (அவரது மகள் சரிகா) நடிகையாக நடிக்க மற்றவர்கள் எல்லோரும் நிஜ பாத்திரங்களாக படத்தில் பேசுகிறார்கள். 


இரண்டாவது அனைத்து பாத்திரங்களையும் நடிகர்களைக்கொண்டு உண்மை வரலாற்றுக்கு பெருமளவு விசுவாசமானதாக உருவாக்கப்படும் திரைப்படம். இதற்கு உதாரணமாக 2ம் உலகப்போரின் இறுதியில் ஜேர்மன் இராணுவத்தினராலேயே ஹிட்லரை கொல்ல முயன்று தோற்ற சதிப்புரட்சியை வைத்து எடுக்கப்பட்ட Valkyrie என்ற 2008ல் வந்த படத்தையும் ஹிட்லரின் இறுதிக்காலத்து பங்கரில் நடந்த சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட படமான Downfall என்ற படத்தையும் சொல்லலாம். இந்த இரண்டு படங்களிலும் உண்மை வரலாறு அடிப்படையில் திரிக்கப்படவில்லை. Peter Hoffman என்கிற அமெரிக்க வரலாற்று பேராசிரியர் ஆலோசனைகளோடேயே Valkrie திரைக்கதை எழுதப்பட்டது. Downfall படம் ஜேர்மன் வரலாற்றாசிரியர் ஜோக்கிம் பெஸ்ற் இறுதிநாட்களில் ஹிட்டரின் பங்கரில் நடந்தவைகளைப் பற்றி எழுதிய புத்தகத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. 




மேதகு படமோ உண்மை வரலாற்றைப்பற்றி எடுக்கப்பட்ட படமாகச் சொல்லப்பட்ட போதிலும் உண்மையில் வரலாறு திட்டமிட்டு மறுதலையாக திரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேதகு என்ற பதம் ஆங்கிலத்தில் His Excellency or Your excellency என்று சொல்லப்படுவதன் தமிழ் வடிவம். புலிகள் பிரபாகரனை விழிப்பதற்கு உத்தியோகபூர்வமாக இதனை பாவித்தார்கள். ஆங்கிலத்தில் வந்த இரு படங்களான His Excellency(1952, UK), Your Excellency(2019, நைஜீரியா) ஆகிய இருபடங்களும் அரசியல் காமெடிப்படங்களே. (பிரபாகரன் உயிரோடு இருக்கும்போது இப்படம் வந்திருந்தால் அன்ரன் பாலசிங்கம் பிரபாகரனிடம் “ தம்பி டேய் உன்னை வச்சு இவன் கிட்டு காமெடி கீமெடிதான் பண்ணப்போறான் போல” என்று எச்சரித்திருப்பார்). மேதகு என்கிற ஒரு காமெடியான தலைப்பை வைத்து வந்த படமான இப்படம் காமெடி இல்லாவிட்டாலும் இதன் திரைக்கதையை எழுதிய கிட்டு தன்னை தானே ஒரு காமெடியனாக்கியுள்ளார். தேவநம்பிய தீசன் என்கிற கி.மு கால இலங்கை மன்னனின் பெயர் தீசன் என்று முடிவதால் அவன் ஒரு தமிழன் என்ற அற்புதமான காமெடியை செய்துள்ளார் கிட்டு. படம் வெளிவந்த ஒரு வாரத்துக்குள்ளேயே சமூக வலைத்தளங்களில் கிட்டுவின் வேடங்கள் வெளிப்படுத்தப்பட்டு விட்டதாலும் அவர் மிகுந்த கோபத்துக்கும் கண்டனத்துக்குமுள்ளாகியுள்ளார். 

 மேதகு படம் தொடங்கும்போதே பிரபாகரனை ஒரு மாவீரனாக சித்தரிக்க “ஒரு மாவீரனின் கதை” என்கிற கூத்துடன் ஆரம்பமாகிறது. பிரபாகரன் ஒரு மாவீரன் அல்ல. நிராயுதபாணிகளைக் கொல்வது மாவீரம் அல்ல. எதிரிகள் எப்போது நிராயுதபாணிகளாயிருப்பார்கள், எப்போது அவர்கள் பாதுகாப்பில்லாமல் நிராயுதபாணிகளாயிருப்பார்கள் என்பதை வேவுபார்த்து திட்டம் தீட்டி கொல்வது மாவீரம் அல்ல. மாபியாக்காரர்கள் தான் இந்தவகையான கொலைகளைச் செய்வார்கள். இதற்கு ஆங்கிலத்தில் உள்ள சொல் Assassination. பிரபாகரன் ஒரு போர்வீரனோ(Soldier) மாவீரனோ அல்ல. அவர் ஒரு நிராயுதபாணிகளைக் கொல்லும் கொலையாளியாகவே( Assassin) ஈழப்போராட்டத்திற்குள் காலடி எடுத்து வைத்தார். துரையப்பாவிலிருந்து அவரால் தனிப்பட்டரீதியில் கொல்லப்பட்ட, கொலைக்கு முயற்சிக்கப்பட்ட இலங்கை பொலீசார், செட்டி தனபாலசிங்கம்(குட்டி மணியோடு கூட்டாக), கனகரத்தினம் MP(உமாமகேஸ்வரன், பிரபாகரன், செல்லக்கிளி கூட்டாக கொழும்பில், இதில் உமா, பிரபாகரனின் குறி தவறிவிட செல்லக்கிளியின் குறியே கனகரத்தினத்தை காயப்படுத்தியது) முதலியோர்களின் கொலைகளில் கொல்லப்பட்டவரகள் நிராயுதபாணிகளாகவே இருந்த சமயங்களிலேயே நடந்தது. ஆயுதபாணிகளாக இருந்த படையினரை ஒருபோதுமே பிரபாகரன் தன்னந்தனியனாக தாக்கி கொன்றதில்லை. அதற்குரிய வீரமும் துணிவும் அவரிடமிருந்ததில்லை. 

ஈழ ஆயுதப்போராட்ட வரலாற்றின் முதல் மாவீரனும் அக்சன் ஹீரோவும் என்றால் அது புளட் சுந்தரம்தான். 1979 ஆண்டின் இறுதிப்பகுதியில் சுந்தரம் உமா மகேஸ்வரனோடு சேர்ந்து வவுனியாவில் ஒரு ஆயுதபாணியாக இருந்த பொலீஸ்காரரை சுட்டு அவர் துப்பாக்கியை கைப்பற்றியிருக்கிறார்.

              சுந்தரம்: அசல் மாவீரன்  


பின் 1981 மே மாதத்தில் புளட் மாணிக்கதாசன்  ஆயுதத்தோடு காவலிலிருந்த இரு பொலீசாரை துணிகரமாக சுட்டுக்கொன்று ஆயுதங்களை கைப்பற்றுகிறார். பின்னதாக புளட் சுந்தரம் தலமையில் யாழ் ஆனைக்கோட்டை பொலீஸ் நிலையம் முற்றாக தாக்கியழிக்கப்பட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. 

               PLOTE மாணிக்கதாசன்


முருங்கன் காட்டுப்பகுதியில் இருந்த புலிகளின் முகாமுக்கு வந்த பொலிஸ் அதிகாரி பஸ்தியாம்பிள்ளையும் ஒரு சார்ஜனும் ஆயுதங்களோடு வந்தபோதும் அங்கு பிரபாகரன் இருக்கவில்லை. அத்தாக்குதலில் செல்லக்கிளி, ராகவன் முதலியோரே அதிரடியாகவும் சமயோசிதமாகவும் செயற்பட்டு தம்மை கொல்லவோ கைதுசெய்யவோ வந்த பொலீஸ் குழுவை கொன்று வெற்றிவாகை சூடினார்கள். நிராயுதபாணிகளைக்கொல்வதைவிட பிரபாகரன் செய்தவைகள் மற்றவர்களோடு சேர்ந்து வங்கிக்கொள்ளைகள் செய்தது. குரும்பசிட்டியில் ஒரு வீட்டில் குட்டிமணி குழுவோடு சேர்ந்து கொள்ளையடித்து ஓடும்போது துரத்தி வந்த பொதுமக்களில் ஒருவரைக்கொன்றது என்பனவே. வங்கிக்கொள்ளைகளில் பிரபாகரன் ஈடுபடும்போதும் தனக்கு ஆபத்தில்லாத வசதியான பாதுகாப்பான ஒரு பொறுப்பையே எடுத்தார் என்பது கணேசன் ஐயர் எழுதிய ஈழப்போராட்ட வரலாற்று நூலில் இருக்கிறது. துணிகரமாக அதிரடியாக தன் பாதுகாப்பையே சுதாட்டமாக எடுத்துக்கொண்டு(Risk Taking) எதிரியைத்தாக்குபவன் தான் வீரன். பிரபாகரன் அப்படியானவர் அல்ல. அவருக்கு ஆபத்தை எதிர்கொள்ளும் துணிவு(Risk) இல்லை. ஈழப்போராட்டத்தில் சுந்தரம், மாணிக்கதாசன், ரெலோ தாஸ், செல்லக்கிளி, சீலன்(சாள்ஸ் அன்ரனி) முதலியவர்கள் வீரர்கள். பிரபாகரன் இல்லை. 2009 மே 18,19 திகதிகளில் ஒரு கோழையாக இலங்கை ராணுவத்தின் முதல் வலயத்தை புலிகளின் எஞ்சிய அனைத்து வளங்களையும் கரும்புலிகளையும் கொண்டு  உடைத்துத் தப்பிச்சென்றபின் இரண்டாவது வலயத்தில்  தன் பிழைப்புக்காக சில மெய்ப்பாதுகாவலர்களோடு நடத்திய(பிரபாகரன் கொல்லப்பட்ட) சமரைத்தவிர  பிரபாகரன் தன் வாழ்நாளில் எந்த ஒரு சமரிலும்(Battle) பங்குபற்றியவர் அல்ல.  எந்த ஒரு ராணுவமுகாம் பொலீஸ் நிலையத்தாக்குதலிலும் பங்குபற்றியவர் அல்ல. பிரபாகரன் பங்குபற்றிய ஒரேயொரு கரந்ததடித் தாக்குதல் 1983 திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதல் தான். எதிரிக்கு கண்ணிவெடிப்பொறிவைத்துக் கொல்வது ஒரு வீரம்மிக்க சமர்க்களம் அல்ல. எதிரி தினமும் வரும் வழியை பலநாள் வேவுபார்த்து திட்டமிடப்பட்ட இக்கண்ணிவெடித்தாக்குதலில் ஒரு சமர்க்களமாகாது. பாதுகாப்பாக மறைந்திருந்து கண்ணிவெடிப்பொறிவைத்து தாக்குகிற கரந்தடித்தாக்குதலே இது.

 திருநெல்வேலி கரந்தடிப்பொறி 

முன்னால் வரும் ஜீப்பில் நால்வரும் பின்னால் வரும் ட்றக்கில் பத்துபேருமாக வரும் இராணுவ சிறிய அணிக்கு கண்ணிவெடிப்பொறிவைத்து நடத்தப்பட்டது. புலிகள் அணியிலும் சம அளவான போராளிகள் மறைவான அரண் எடுத்துக் காத்திருந்தனர். இதில் பல வகைகளில் புலிகளின் அணி பலமானதாக இருந்தது.

 1. புலிகளே தாக்குதல் நடத்தும் இடத்தையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்திருந்தனர். இடம் ராணுவத்தினரின் கோட்டை அல்ல. ஆக புலனாய்வு அடிப்படையிலும் இது புலிகளுக்கு உவப்பான களம்.

 2. புலிகள் பயன்படுத்திய ஆயுதங்களின் பலம் (Fire power) இராணுவத்தினருடையதை விட பலமடங்கு பலமானது. அக்காலத்தில் இலங்கை ராணுவத்தினர் சீன தயாரிப்பான T56, மற்றும் Sub Machine Gun முதலிய ஆயுதங்களையே வைத்திருந்தனர். ஆனால் புலிகளின் அணியிலிருந்து குறைந்தது இரு இரு மிகச்சக்திவாய்ந்த G3 துப்பாக்கிகள்( பிரபாகரனுக்குடமும் கிட்டுவிடமும்) பயன்படுத்தப்பட்டன. ஏனைய போராளிகள் SMG, Automatic rifles, றிப்பீற்றர்( பசீர் காக்கா) என்பவற்றை பயன்படுத்தினர். T56 சோவியத் AK 47ஐ அடியொற்றி தயாரிக்கப்பட்டதாயினும் நம்பகத்தன்மையிலும் செயல்படும் திறனிலும் AK 47 தான் மேன்மையான துப்பாக்கி. அப்போது இலங்கை ராணுவத்தினர் AK 47ஐக்கூட பயன்படுத்தவில்லை என்பது போக புலிகள் அப்போது வைத்திருந்து பயன்படுத்திய G3 துப்பாக்கி AK 47ஐ விட பலமடங்கு சக்திவாய்ந்த மிக முன்னேற்றகரமான துப்பாக்கி. 

 G3 ன் வரலாறு

பனிப்போர்க்காலத்தில் மேற்கு ஜேர்மானியர்களும் கிஸ்பானியர்களும் சேர்ந்து கண்டுபிடித்த மகத்தான துப்பாக்கி G3. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கர்கள் M1 Garand என்ற சிறப்பான துப்பாக்கியை பயன்படுத்தினார்கள். அப்போரில் உலகத்து ராணுவங்களால் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளில் சிறப்பானது இதுதான். ஆனால் 1947ல் ரூசியர்கள் கண்டுபிடித்த AK 47 என்ற துப்பாக்கி M1 Garand ஐ விட மகத்தானது ஆனதால் M1 Garand செல்வாக்கை உடைத்தது. ஜேர்மனி இரண்டாகி பனிப்போர் தொடங்கியபோது மேற்கு ஜேர்மன் இராணுவம் வைத்திருந்தது அமெரிக்க M1 Garand ஆயுதத்தைத்தான். மேற்கு கிழக்கு ஜேர்மன் எல்லை போர்க்களத்தில் கிழக்கு ஜேர்மானிய படைகளிடமிருந்த AK 47 துப்பாக்கியின் பலத்தை உடைக்க மேற்கு ஜேர்மானியர்கள் கண்டுபிடித்த மகத்தான துப்பாக்கிதான் G3. 1959 இலிருந்து மேற்கு ஜெர்மானியப்படைகள் இதனைப் பயன்படுத்தின. 1989ல் இரு ஜேர்மனிகளும் இணைந்து ஒரே நாடானபின்னரும் ஒருமித்த ஜெர்மானிய இராணுவத்தினரின் ஆயுதமாக G3 இருந்தது. 

                 G3: Cold War Classic


1979ல் புலிகள் இயக்கம் இரண்டாவதற்கு முதலே பிரபாகரனின் ஆயுத கொள்வனவாளராக ராகவன் ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரியான தேவர் என்பவரிடமிருந்து பணத்துக்கு புலிகளின் முதல் G3 ஐ கொள்வனவு செய்திருந்தார். 

 3. முன்னால் வரும் ஜீப்பை வரவிட்டு பின்னால் வரும் ட்றக்கை கண்ணிவெடியில் வெடிக்க வைப்பது திட்டம். இக்களத்தில் மிக அருகில் நிலை எடுத்திருந்தவர் கண்ணிவெடியை வெடிக்கவைத்த செல்லக்கிளி. மிகத்துரத்தில் பின்னால் மிகப்பாதுகாப்பான நிலையை மிகப்பலமான துப்பாக்கியுடன் எடுத்திருந்தவர்தான் பிரபாகரன். பிரபாகரனுக்கு பல அடிகள் முன்னால் விக்ரர் ஒரு SMG உடன் நிலை எடுத்திருந்தார். திட்டம் பிழைத்து ஜீப் கண்ணிவெடியில் சிக்கிவிட்டதால் ட்றக்கிலிருந்த 9 இராணுவத்தினரையும் பிரபாகரனே தனது G3 துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார் என்று இத்தாக்குதலைப்பற்றி உத்தியோகபூர்வமான விளக்க கட்டுரை எழுதிய கிட்டு குறிப்பிட்டுள்ளார். கொல்லும் தூரமும் செல்லும் தூரமும் மிக அதிகமான நம்பகரமான மகத்தான G3 மூலம் பாதுகாப்பான அரணிலிருந்தும் பாதுகாப்பான தூரத்திலிருந்தும் பிரபாகரன் கண்ணிவெடி அதிர்ச்சியிலிருந்து பதாதித்து சுதாகரிக்கமுதல் தடுமாறிய இராணுவத்தினரை சுட்டுக்கொல்வது மிக வசதியானதும் பாதுகாப்பானதும். இது மாவீரம் அல்ல. இக்காலத்தில் துப்பாக்கி சுடும் வீடியோ Games விளையாடுபவர்களின் நிலைக்கொப்பானது பிரபாகரனின் அந்நாள் நடவடிக்கை. ஒப்ரோய் தேவன் பிரபாகரனுக்கு துவக்கு கழற்றி பூட்ட மட்டுமே தெரியும் என்று எள்ளி நகையாடியதை புஸ்பராஜா தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். கணேசன் ஐயர் எழுதிய புத்தகத்தில் பிரபாகரன் இரவில் எழும்பி துப்பாக்கிகளை விளையாட்டுச் சாமான்களைப்போல அளைந்து ரசித்து பார்த்துக்கொண்டிருப்பார் என எழுதியுள்ளார். வாழ்நாள் பூராகவும் துப்பாக்கிகளை ஒரு குழந்தை விளையாட்டுச் சாமான்களை காதலிப்பதுபோல காதலித்தவர் பிரபாகரன். தான் போராடுவதாகச் சொல்லிக்கொண்ட தமிழ் மக்களை காதலித்தவர் அல்ல பிரபாகரன். 

                             G3                                             பிரபாகரனின் விளையாட்டுச் சாமான்



4. இத்தாக்குதலின் தளபதியாக செல்லக்கிளியே செயற்பட்டார் என்பதை புலிகளின் உத்தியோகபூர்வ அறிக்கையே குறிப்பிடுகிறது. செல்லக்கிளி இத்தாக்குதலில் கொல்லப்பட்ட மர்மம் இன்றுவரை நீடிக்கிறது. மிகத்துணிவான மாவீரனான செல்லக்கிளி ஒரு புலி உறுப்பினராலே கொல்லப்பட்டிருக்கலாம் என்று இன்றுவரை நம்பப்படுகிறது. செல்லக்கிளியின் மைத்துனரான செட்டி தனபாலசிங்கம் அவரது வீட்டில் அவரது குழந்தையின் 31ம் சடங்குநாளில் நிராயுதபாணியாக இருந்த ஒரு தருணத்தில் பிரபாகரனாலும் குட்டிமணியாலும் சுட்டுக்கொல்லப்பட்டது வரலாறு. யுத்தம் முடிந்தபின் செல்லக்கிளியின் மூத்த சகோதரரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கனகரத்தினம் செல்லக்கிளி புலிகளாலேயே அத்தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிற தகவலை வெளிப்படையாகவே சொல்லியிருந்தார். 

            செல்லக்கிளி: அசல் வீரன்


அசலான சமர்களில் பங்குபற்றாத போர்வீரன்(Soldier) இல்லாத பிரபாகரன் தன் “போரியல்” அறிவை யுத்தத் திரைப்படங்கள் முலம் பெற்றவர். பிரபாகரனுக்கு மிகவும் பிடித்த பிரபாகரனின் பாடநூல் என்று சொல்லக்கூடிய ஒரு திரைப்படம் Godfather. அமெரிகாவில் இயங்கிய இத்தாலிய மாபியாக்களைப்பற்றிய மகத்தான திரைக்காவியம் Godfather. பிரபாகரன் விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் ஒரு மாபியா இயக்கம் போலவே கட்டி எழுப்பினார். எதிரிகள் நிராயுதபாணிகளாயிருக்கும்போது கொல்வது, பல எதிரிகளை நன்கு திட்டமிட்டு ஒரே சமயத்தில் கொல்வது போன்ற கோழைத்தனமான சூக்குமங்களை பிரபாகரன் Godfather படத்திலிருந்தே கற்றார். ஈழப்போராட்டத்தில் 5 பெரிய இயக்கங்கள் இருந்தது போலவே Godfather படத்திலும் 5 மாபியாக்குழுக்கள் இருந்தன. Godfather கதாநாயகன் எவ்வாறு தன் எதிரிகளை தான் தன் சகோதரியின் குழந்தைக்கு தேவாலயத்தில் Godfather ஆக இருக்கும் சடங்கை செய்யும்போது ஆள்வைத்து கொல்கிறானோ அவ்வாறே பிரபாகரனும் தன் எதிரிகளான பல நிஜமான ஈழப்போராட்ட மாவீரர்களைக் கொன்றார். 

Godfather பட பாணியில் பிரபாகரன்         செய்த     மாபியா       கொலைகள்



1982ல் ஈழப்போராட்டத்தின் முதல் ஆயுதப்போராட்ட மாவீரன் சுந்தரம் நிராயுதபாணியாக இருந்து அச்சகத்தில் தான் ஆசிரியராக இருந்த புதியபாதை பத்திரிகையை மெய்ப்புப்பார்த்துக் கொண்டிருந்தபோது சீலனால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

1983 திருநெல்வேலித் தாக்குதலின் சில நாட்கள் பின் ஒப்ரோய் தேவன் நிராயுதபாணியாக இருந்தபோது புலிகளால் கொல்லப்பட்டார்.

 புகையிலைப் பற்றைக்குள் உயிருக்குப் பயந்து நிராயுதபாணியாய் ஒளித்துக்கொண்டிருந்த சிறீசபாரத்தினம் புலிகளால் கொல்லப்பட்டார்.

 போர்க்களம் இல்லாத நம் மூதாதையர்களின் பூமியான தமிழ்நாட்டில் பத்மநாபாவும் தோழர்களும் வஞ்சகமாகக் கொல்லப்பட்டனர். 

இவை எல்லாவற்றுக்கும் முன்னதாக சக புலி உறுப்பினர்களான மைக்கலையும் பற்குணத்தையும் காட்டிலேயே அருகில் வைத்துக்கொன்று முதல் இயக்க உட்படுகொலைகளை ஆரம்பித்து வைத்தவர் பிரபாகரன். 

 ஒரு மாபியா இயக்கத்தலைவனை மாவீரனாகக் கட்டமைக்க மேதகு படத்தில் இடம்பெற்றுள்ள முக்கியமான வரலாற்று மோசடிகள் 

 யாழ் நகரபிதா அல்பிரட் துரையப்பா தான் தமிழாராய்சி மாநாட்டில் “சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட” திட்டத்தின் சூத்திரதாரி என்று கட்டமைப்பது

 (அ) முதலில் நடந்தது படுகொலை அல்ல. வானத்தை நோக்கிச்சுட்ட எச்சரிக்கை வேட்டுக்கள் மின்சார கம்பிகளில் பட்டு விழுந்ததால் மின்சாரம் தாக்கியே அந்த பொது மக்கள் இறந்தார்கள். ஆக இது ஒரு திட்டமிடப்படதாத துரதிஷ்டவசமான விபத்து. 

 (ஆ) மாநாட்டை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் எதிரானதாக இருக்கவில்லை. அரசாங்கம் மாநாட்டை கொழும்பில் நடத்துவதையே விரும்பியது. மாநாட்டு ஒழுங்கமைப்பாளர்கள் யாழ்ப்பாணத்தில் நடத்த தீர்மானித்ததும் அரசாங்கத்திற்கு உவப்பானதாக இல்லாவிட்டாலும் அதனை எதிர்க்கவில்லை. யாழ்ப்பாணப் பொலீசாருக்கும் மாநாட்டு ஒழுங்கமைப்பாளர்களுக்குமிடையிருந்த பிரச்சனை ஒரு ஆய்வு மாநாட்டில் பிரிவினை/தேசியவாத தீவிரவாதங்களை முன்வைக்கும் தமிழக ஜனார்த்தனன் முதலியோர் மாநாட்டு மேசையில் ஏறக்கூடாது/பேசக்கூடாது என்பதுதான். அப்போது தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் இந்த மாநாட்டை தன் அரசியல் நலன்களுக்காக பயன்படுத்திக்கொண்டார். மாநாட்டுப்பகுதியிலிருந்து ஜனார்த்தனன் ஏற்கெனவே பொலீசாருடன் உடன்பட்டபடி குறித்த நேரத்தில் வெளியேறியிருந்தால் பொலீசார் அவ்விடத்திற்கு வந்திருக்கவேண்டிய தேவையே இல்லை.

 (இ) பிரதமர் சிறிமாவோ பௌத்த பிக்குகளின் வேண்டுதலால் நகரபிதா துரையப்பாவிடம் சொல்லி துரையப்பா பின் பொலீசாரை ஏவிவிட்டு தழிழர்கள் சிதிரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக படத்தில் காட்டப்படுவது அப்பட்டமான பொய்கள். 

 (ஈ) அல்பிரட் துரையப்பா கணிசமான வாக்கு வங்கியை தனக்கென யாழ்ப்பாணத்தில் வைத்திருந்தவர்.  மக்களிடம் செல்வாக்கு மிக்கவராக இருந்தவர். 1960 இலிருந்து 1965 வரை யாழ்ப்பாண சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினராகவும் பல தடவைகள் யாழ்ப்பாண நகரபிதாவாகவும் மக்களால் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டவர். உண்மையில் அக்கால யாழ்ப்பாண வாக்கு வங்கி அல்பிரட் துரையப்பா, தமிழரசுக்கட்சி, தமிழ்க்காங்கிரஸ் ஆகிய மூவரிடமும் சம அளவில் பிரிக்கப்பட்டிருந்தது. யாழ் நகர தலித் மக்களிடமும் முஸ்லீம்களிடமும்(10%) சிங்களவர்களிடமும்(10%) அல்பிரட் துரையப்பா மிக்க செல்வாக்கு மிக்கவராக இருந்தார். நியாயப்படி துரையப்பாவை தேர்தலில் தோற்கடிக்கமுடியாத தமிழரசுக்கட்சியின் தலைவர் அமிர்தலிங்கம் சூட்சி முலம் அவரை அகற்ற தேர்ந்தெடுத்த வழிமுறையே அவரை துரோகியாக கட்டமைத்தது. துரையப்பா தன்பாணி அரசியலில் ஆளுங்கட்சிக்கு நட்பாக இருந்ததை பயன்படுத்தி அவரை ஓரங்கட்ட இந்த தமிழாராய்ச்சி மாநாட்டு விபத்து மரணங்களை தமிழரசுக்கட்சி பயன்படுத்தி அவரை துரோகியாக பொய்ப்பிரச்சாரம் செய்தது.

 (உ) துரையப்பா கொல்லப்படவேண்டும் என்று தமிழரசுக்கட்சி மேடைகளில் அக்கட்சி தலைவர்கள் பலரால் முழங்கப்பட்டு அக்கால இளைஞர்கள் உருவேற்றப்பட்டார்கள். உண்மையில் இதற்குப் பின்னால் இருந்த உண்மைக்காரணமான தேர்தல் போட்டியை உணரும் நிலையில் துரையப்பாவைக் கொல்ல முயன்ற பொன் சிவகுமாரனும் கொன்ற பிரபாகரனும் இருக்கவில்லை. துரையப்பாவின் கொலையை தூண்டிவிட்டவரும் அதனால் நன்மை பெற்றவரும் அமிர்தலிங்கம்.  அவரை மேதகு படத்தில் தவிர்த்ததானது திட்டமிட்ட மோசடி. அமிர்தலிங்கம்தான் பிரபாகரனின் பிதாமகராக 1980களின் ஆரம்பம் வரை இருந்தவர். தன்னுடைய தேர்தல்/வாக்கு அரசியல் நலன்களுக்காக அமிர்தலிங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட யாழ் மேலாதிக்க சைவவேளாள ஆதிக்க கருத்தியலே பிரபாகரனின் கருத்தியலாக பிரபாகரன் இறக்கும்வரை இருந்தது.  செல்வநாயகம் மட்டுமே படத்தில் வருகிறார். கொலையை தூண்டிய அமிர்தலிங்கத்தை புலிகளே கொன்றது பின்னாளைய வரலாறு என்பதை மேதகு இயக்குனருக்கு தவிர்க்கவேண்டிய தேவை திட்டமிட்ட மோசடியின்பாற்பட்டதே.

(ஊ) உண்மையில் வரலாற்றில் துரையப்பாதான் ஒரு மாவீரன். அகிம்சையிலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை வைத்திருந்த நாயகன். அமிர்தலிங்கம் முன்னெடுத்த "தமிழ்த்தேசிய போராட்டம்" யாழ் மையவாத சைவவேளாதிக்க ஆதிக்க புரட்டு என்பதை தன் அரசியல் வாழ்வாலும் மரணத்தாலும் நிரூபித்தவர். சாதிவெறியும்  சைவவேளாள ஆதிக்கமும் யாழ் மையவாதமும் தான் அமிர்தலிங்கமும் பின்னாளில் பிரபாகரன் முன்னெடுத்த "தமிழ்தேசியப் போராட்டத்தின்" உண்மைக்கருத்தியல் என்பதை அம்பலப்படுத்தியவர். அமிர்தலிங்கம் மட்டக்களப்பு ராசதுரையை ஓரங்கட்டி கூட்டணியின் தலைவரானதற்கும் பிரபாகரன் "கேணல்" கருணாவை புலிகளிலிருந்து நீக்கியதற்கும் பின்னாலிருந்தது யாழ் மையவாதம். யாழ்ப்பாண மாவட்ட மாணவர்கள் அனுபவித்துவந்த சலுகைகள் பாதிக்கப்பட்டதை தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டதாகப் புனைந்து நடத்தப்பட்ட தரப்படுத்தல் போராட்டத்திற்கு பின்னாலிருந்தது யாழ் மையவாத சைவ வேளாள மேலாதிக்கமே.

  மாவீரன் அல்பிரட் துரையப்பா                 அகிம்சை சனநாயகம் சமூகநீதி



தன்னுடைய 15 வருட அரசியல் பொதுவாழ்வில் துரையப்பா யாழ்ப்பாணத்தை நவீனமயமாக்கி அபிவிருத்தி செய்தார். யாழ் நகர தலித் மக்களின் வாழ்வை முன்னேற்ற முயன்றார். பின்னாளில் செல்லன் கந்தையன் என்கிற ஒரு தலித் யாழ் நகர மேயராவதற்கு அன்று கால்கோள் போட்டவர் துரையப்பாவே. 

பிரபாகரன் தன் 34 வருட பாசிச ஆயுதப்போராட்டத்தின் மூலம் சாதித்தது என்ன? 

1.1980ல் பத்து லட்சமாக இருந்த யாழ் குடாநாட்டின் சனத்தொகையை இன்று இருபது லட்சமாக இருக்கவேண்டிய  சனத்தொகையை வெறும் ஐந்து லட்சமாக இறப்புக்களாலும் புலம்பெயர்வுகளாலும் குறைத்தது.

2. தமிழர்களின் நலன்களுக்காக அன்றி தன்னுடைய பாசிச ஆட்சி நலன்களுக்காக தமிழர்களுக்கு இந்திய மத்தியஸ்தத்துடன் கிடைத்த,, ஒப்பீட்டடிப்படையில்  நல்ல தீர்வான இலங்கை இந்திய ஒப்பந்தத்தை சிதைத்து   1987 ஒக்ரோபரின் பின் தொடங்கப்பட்ட அனைத்து ஈழயுத்தங்களின் சிற்பியாக தமிழர்களின் அதிகளவான மரணங்களுக்கும் போர் அக்கிரமங்களுக்கும் காரணமானவராக இருந்தது. 

3. தன் ஆயுதப்போராட்டம் மூலம் தமிழீழம் பெற்றுக்கொடுக்க முடியாததோடு ஈழத்தின் சர்வதேச பூகோள அரசியல் சமன்பாடுகள்  ஈழத்தின் சிறுபான்மைச் சமூகங்களுக்கு பாதகமாக வரக்கூடிய நிலைக்கு கொணரக்கூடியவாறு சீனா என்கிற பெருச்சாபத்தையும் இச்சமன்பாடுகளில் கொணர்ந்து கோர்த்துவிட்டு கோவண ஆண்டியாகச் செத்துப்போனது.

 மேதகு படம் ஒரு வரலாற்றுப் புரட்டு. விளம்பரக் காணொளிகள் ஒரு நிமிடத்திற்கும் குறைவானவை. பெரும்பாலான விளம்பரங்கள் பொருள் பற்றிய பொய்களை மிக நம்பகரமான கனகச்சிதமான காட்டிப்படுத்தல் நடிப்பு மூலம் உருவாக்கப்படும். சிகரெட் ஆண்மையை அதிகரிக்கும் என்று முன்னைய காலங்களில் வந்த விளம்பரங்களை பார்த்திருப்பீர்கள். மேதகு படம் ஒரு 90 நிமிட விளம்பரம். இதனால்தான் நடிப்பு காட்சிப்படுத்தல் எல்லாம் கனகச்சிதமாக வந்திருக்கிறது. 

     ஞானதாஸ்: விளம்பர "கலைஞன்"



போரியலில் என்பது பெரிய துறை. அதில் வெறும் குறிபார்த்துச்சுடுதலில்(Sharp Shooting) மட்டுமே தேறியவர் பிரபாகரன். இது போலவே திரைப்படம் என்பது ஒரு பெரிய கலைத்துறை. அதில் விளம்பரக்காணொளிகள் மட்டுமே எடுக்கத்தகுதியான ஞானதாஸ் காசிநாதர் என்கிற ஒரு ஈழ அரைவேக்காடு தன்னை ஒரு ஈழ சினிமா முன்னோடியாகவும் இயக்குனராகவும் கட்டமைத்து ஈழ தமிழ் இளைஞர்களை காயடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்குமுதல் Guerilla Warfare ற்கும் Gorilla குரங்குக்கும் வித்தியாசம் தெரியாமல் ஞானதாஸ் தன் முகநூலில் பதிவுபோட நான் அதனை சுட்டிக்காட்ட என்னை Unfriend செய்துவிட்துவிட்டு ஓடிவிட்டார். இப்போது பொறுக்கியெடுத்த ஆங்கிலச்சொற்களை தன் தமிழ் கட்டுரைகளில் போட்டு படங்காட்டி வருகிறார். தன்னை Tamil Avant Garde Cinema Activist என்று முகநூலில் அறிமுகப்படுத்துகிறார்😁.இந்த ஞானதாஸ் ஒரு விளம்பரக்காணொளிகளை எடுக்கவேண்டிய விளம்பரக் கொம்பனியொன்றை நடத்தமட்டுமே தகுதியானவர் மேதகு மகத்தான படமாம். ஒரு கோழையும் பாசிஸ்டும் 1987 ஜூலைக்குப்பின் தொடங்கப்பட்ட அனைத்து ஈழப்போர்களின் சிற்பியும் பெருமளவு தமிழ்மக்கள் கொல்லப்பட்ட போர்களுக்கு காரணமானவருமான பிரபாகரன் மகத்தான தமிழ் மாவீரனாகவும் நல்ல வரலாற்றுத் தலைவனாகவும் கட்டமைக்கப்படுகிறபோது ஞானதாஸ் காசிநாதர் தன்னை ஈழச்சினிமாவின் முன்னோடியாகக் கட்டமைப்பது பெரிய விடயமா என்ன? பாவம் ஞானதாஸ் பிழைத்துப்போகட்டும் விடுங்கள்.

உசாத்துணை 

அல்பிரட் துரையப்பா கொலை வரலாறு

தொடர்பான கட்டுரைகள்

1. புலிகளால் ஐரோப்பாவில் கொல்லப்பட்ட தமிழர்களின் கதை

2. புலிகளால் கொல்லப்பட்ட இரு தமிழ்ப்பெண் கவிஞரின் கதை

3. அன்ரன் பாலசிங்கம் வரலாறு 01

4. அன்ரன் பாலசிங்கம் வரலாறு 02

5. பிரபாகரனின் பாணபத்திர ஓணாண்டிகள்

Comments

  1. அருமை தோழரே உங்கள் கருத்துக்களில் தெளிவான உண்மைகள் உள்ளன...
    தற்போது வரலாறு தெரியாத முட்டாள்களுக்கு தேசத்துரோகி பிரபாகரன் தேசியத்தலைவராக தெரிகின்றான்..... எல்லாம் காலக்கொடுமை....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

 யாழ் பல்கலைக்கழக உபவேந்தர், விரிவுரையாளர்களின்   கல்வி அறிவு மோசடிகள்

அவந்திகா: ஓர் அவல மனைவியின் வாக்குமூலம்